அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் ஆனார்?... கிண்டல் செய்யும் திமுக

Aadmika
Apr 14, 2023,01:11 PM IST
சென்னை : பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக.,வின் ஊழல் பட்டியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை எப்படி ஐபிஎஸ் ஆனால் என சந்தேகமாக உள்ளது என கிண்டல் செய்து பதிலளித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலை திமுக.,வின் ஊழல் பட்டியலை செய்தியாளர்கள் முன் வெளியிட்டார். இது முதல் பார்ட் தான் என்றும், இன்னும் நான்கு பார்ட்கள் அடுத்தடுத்து ஆண்டு முழுவதும் வரும் என்றும் தெரிவித்திருந்தார். திமுக.,வின் ஊழல் பட்டியல் மட்டுமல்ல அதிமுக.,வின் ஊழல் பட்டியலும் வரும். திமுக.,வின் ஊழலுக்கு எதிராக ஜூன் முதல் வாரம் துவங்கி பாத யாத்திரை செல்ல உள்ளதாகவும் அறிவித்தார்.



அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுக.,வின் ஊழல் பட்டியல் பற்றி கருத்து தெரிவித்திருந்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விபரங்கள் ஆதாரம் அற்றவை. அண்ணாமலை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நீதிமன்றமாக சுற்றுப் பயணம் செய்வார். அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என சந்தேகம் வருகிறது. அவர் அனைவரின் நேரத்தையும் வீணடித்து வருகிறார்.

ஏதேனும் ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட அண்ணாமலை சொல்லவில்லை. அண்ணாமலை பட்டியல் வெளியிட்டுள்ள 12 பேரும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள் என்றார். முன்னதாக திமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட போவது பற்றி கருத்து தெரிவித்துள்ள திமுக அமைச்சர் ரகுபதி, வெளியிட்டால் வெளியிடட்டும். எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியில் பயமில்லை என கூறி இருந்தார்.