கர்நாடகாவில் பாஜக படுதோல்விக்கு இது தான் காரணம்.. போட்டுடைத்த முரசொலி

Aadmika
May 18, 2023,06:54 AM IST

சென்னை : நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற படுதோல்விக்கு என்ன காரணம் என்பதை திமுக.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான முரசொலி கட்டுரையாக வெளியிட்டுள்ளது.


முரசொலியின் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:




2024 ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது என்பதை முன்கூட்டியே எடுத்துக் காட்டும் விதமாக கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை கர்நாடகா காட்டி உள்ளது. பாஜக.,வின் முக்கியத்துவம் என்ன என்பதை இந்த தேர்தலிலேயே அளவிட்டு தெரிந்து கொள்ளலாம்.


கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதை பிரதம் மோடி மானப் பிரச்சனையாக கருதுகிறார். கர்நாடக மக்களின் விருப்பங்கள் தன்னுடைய விருப்பம் என்றும், கர்நாடக மக்களின் முடிவு தன்னுடைய முடிவு என்றும் கூறி இருந்தார்.


கர்நாடக தேர்தலில் பாஜக.,வின் படுதோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இஸ்லாமியர்கள் மீது வெளிப்படையாக காட்டிய வெறுப்புணர்வு தான். குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்படும், ஒரே மாதிரியான குடியுரிமை  குறியீடு கொண்டு வரப்படும் என கர்நாடக மக்களுக்கு பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக வெளிப்படையாக அறிவித்தது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை வெளிப்படையாக ஆதரித்தது.


கர்நாடக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா, தங்களுக்கு இஸ்லாமிய ஓட்டு ஒன்று கூட தேவையில்லை என பேசினார். பாஜக.,வை சேர்ந்த மற்றொரு தலைவர் சி.டி.ரவி, திப்பு சுல்தானின் ஆதரவாளர்களுக்கு எதிராக போர் தொடுப்போம் என பேசினார்  என தெரிவித்துள்ளது. 


கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை கூட்டணிக் கட்சியான திமுக கொண்டாடி வருகிறது.  இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக.,வின் தோல்விக்கான காரணங்கள் குறித்து முரசொலியில் நீண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.