அமித்ஷா காலில் விழுந்து கெஞ்சிய பழனிசாமி.. பேட்டை ரவுடி..: அதிரடி காட்டிய ஆர்.எஸ்.பாரதி

sahana
Jun 16, 2023,01:20 PM IST
சென்னை: ‘தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு சென்றபோது, அமித்ஷாவை சந்தித்து காலில் விழுந்து பழனிசாமி கெஞ்சியதாக’ திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: திமுக.,வின் வரலாற்றையும், சோதனையையும், அவற்றில் கண்ட வெற்றியையும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை மூலம் தெரியப்படுத்தினார். அதற்கு அதிமுக.,வின் பழனிசாமியால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் அமலாக்கத்துறை அதிகாரி போல பேசியுள்ளார். செந்தில் பாலாஜிக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட கொடுக்காமல் துன்புறுத்தியுள்ளனர். அமலாக்கத்துறை ரெய்டு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்பட்டதில்லை. செந்தில்பாலாஜியை 16 மணிநேரம் துன்புறுத்தியுள்ளனர். இதனால் அவருக்கு இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



கெஞ்சல்

ஒருவருக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதய நோய் வரலாம். அதிமுக கட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் நிகழ்ச்சியில் பங்கேற்று திடீரென உயிரிழந்தார். இதய நோய் குறித்து கேவலமாக பேசியுள்ளார் பழனிசாமி. தொண்டருக்கோ, அமைச்சருக்கோ ஏதாவது ஆனால், பதறிப்போய் முதலமைச்சர் நேரில் சென்று பார்ப்பார். ஆனால், தங்கமணி, வேலுமணி வீட்டில் ரெய்டு சென்றபோது, அமித்ஷாவை சந்தித்து காலில் விழுந்து பழனிசாமி கெஞ்சினார். இது பொய் என்றால் என் மீது வழக்கு போடட்டும். பா.ஜ.க, வலியுறுத்தலால் ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா பதவி வழங்கினார். அமலாக்கத்துறை ரெய்டு குறித்து பேசுவதற்கு அவருக்கு எந்த அதிகாரமும், அருகதையும் இல்லை.

ஒரு கோடி ரூபாய்க்கு இட்லி

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு கோடி ரூபாய்க்கு அக்கட்சி தொண்டர்கள் இட்லி, தோசை சாப்பிட்டதாக ஆறுமுகசாமி அறிக்கையில் உள்ளது. அப்படியிருக்கையில், முதலமைச்சர் மருத்துவமனை சென்று பார்த்ததை கொச்சைப்படுத்தி பேசுகிறார். பழனிசாமிக்கு கொஞ்சம் கூட இதயமே இல்லை. மனித நேயத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும். பேட்டை ரவுடி போல அவர் பேசுகிறார். பழனிசாமி மீது ரூ.4000 கோடி ஊழல் வழக்கு தொடுத்தேன். அப்போது அவர் உச்சநீதிமன்றம் சென்று சிபிஐ., விசாரணைக்கு தடை வாங்கினார்.

2ஜி வழக்கில் சிறையில் கனிமொழி, ஆ.ராசாவை ஸ்டாலின் சந்திக்கவில்லை என்பது பச்சை பொய். 2011ல் திகார் சிறையில் ஸ்டாலின் நேரில் சென்று பார்த்துள்ளார். நான் ஸ்டாலினுக்கு அடிமையாக இருப்பதற்கு விரும்புகிறேன். ஒரே கட்சியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறேன். பழனிசாமியை போன்று பதவியை பெற்றவன் அல்ல நான். பழனிசாமி மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும். பழனிசாமி நீதிமன்ற படியேற தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.