சட்டத்திற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.. அமலாக்க அதிகாரிகளுக்கு திமுக கிடுக்கிப் பிடி!

Su.tha Arivalagan
Jun 15, 2023,10:07 AM IST
சென்னை: ஆட்சியாளர்களுக்கு தாங்கள் செய்யும் தவறு தெரியாமல் இருக்கலாம். ஆனால் அரசியல் சாசனத்திற்கும், சட்டத்திற்கும் அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும். இதை அமலாக்கப் பிரிவினர் உணர வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பியும், வழக்கறிஞருமான வில்சன் கூறியுள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் நாடுமுழுவதும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கைதுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும், தேசியத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முற்றிலும் சட்ட விதிகளை மீறி இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கண்டனம் எழுந்துள்ளது.



மறுபக்கம் பாஜகவினர் இந்தக் கைதை கொண்டாடி வருகின்றனர். அமித்ஷாவைப் பகைத்துக் கொண்டால் இதுதான் கதி என்ற அளவுக்கு அவர்களது கொண்டாட்டம் இருக்கிறது. அமித் ஷா வருகையின் போது கரண்ட்டைப் பிடுங்கினார் செந்தில் பாலாஜி.. இப்போது அவரது பியூஸையே பிடுங்கி விட்டார் அமித்ஷா என்றெல்லாம் பாஜகவினர் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக வழக்கறிஞர் வில்சன் ஒரு ட்வீட் போட்டுள்ளார். ��தில் அவர் கூறியிருப்பதாவது: 

ஆட்சியாளர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் அரசியல் சாசனத்தையும், சட்டத்தையும் மதிக்க வேண்டும், அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். தமிழ்நாடு சட்டசபை அமைந்துள்ள வளாகத்தில் இருக்கும் தலைமைச் செயலகத்திற்குள் ரெய்டு நடத்த வேண்டும் என்றால் சபாநாயகர் அல்லது தலைமைச் செயலாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.

விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து வரும் ஒருவரை, நள்ளிரவில் எந்தவிதமான காரணமும் இல்லாமல் கைது செய்யும்போது, அவரது குடும்பத்தினருக்கு முறையாக தகவல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் குடும்பத்துக்குக் கூட தகவல் கொடுக்காமல், மனிதாபிமானமே இல்லாமல், உணவு கொடுக்காமல், சரியாக தூங்க விடாமல் மன உளைச்சல் கொடுத்து கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர்.

போர்க் கைதிகள் கூட அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் செய்த இத்தகைய கொடுமைகளைப் போன்ற சித்திரவதையை சந்தித்திருக்க மாட்டார்கள். ஜனநாயகத்தில் இத்தகைய கொடூரத்திற்கு என்றுமே இடம் இல்லை என்று கூறியுள்ளார் வில்சன்.