ஒடிஷா ரயில் விபத்து எதிரொலி.. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்

Su.tha Arivalagan
Jun 05, 2023,09:57 AM IST
சென்னை: ஒடிஷா ரயில் விபத்து எதிரொலியாக நடந்து வரும் சீரமைப்புப் பணிகளையடுத்து இன்று காலை 7 மணிக்குக் கிளம்ப வேண்டிய சென்னை சென்டிரல் - ஷாலிமார் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10.45 மணிக்குக் கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகியதில் 260க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நடந்த பகுதியில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.



இந்த நிலையில், இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் 123 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், 56 ரயில்கள் வேறு பாதைய��ல் திருப்பி விடப்பட்டுள்ளன. 10 ரயில்கள் குறிப்பிட்ட பகுதிகளில் ரத்து செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. 14 ரயில்கள் நேரம் மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன. 7ம் தேதி வரை இந்த மாற்றங்கள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சியால்டா - பூரி டூரன்டோ, ஹவுரா - சென்னை மெயில், கன்னியாகுமரி -  ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார் எக்ஸ்பிரஸ், திருப்பதி வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், பெங்களூர் எஸ்எம்விடி சூப்பர் பாஸ்ட், புருலியா விழுப்புரம், சந்திரகாஞ்சி ஏசி சூப்பர் பாஸ்ட்  ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

தாம்பரம் - தின்சுக்கியா எக்ஸ்பிரஸ், புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், புது டெல்லி - பூரி எக்ஸ்பிரஸ் ஆகியவை மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், காலை 10.45 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புவனேஸ்வருக்கு சிறப்பு ரயில்

இதற்கிடையே சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புவனேஸ்வருக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று இரவு 7.20 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு அடுத்த நாள் மாலை 3.25 மணிக்கு புவனேஸ்வர் போய்ச் சேரும்.  11 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், 2 பொதுப் பட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் உள்ளிட்டவை இதில் அடங்கியிருக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.