"கர்நாடகா முதல்வர்".. டிவிட்டரில் பதறிய பாஜக.. கடுப்பான காங்கிரஸ்!

Su.tha Arivalagan
May 18, 2023,08:10 AM IST
டெல்லி: கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைக்கும் விவகாரம் தொடர்பாக பாஜக நீலிக்கண்ணீர் வடிக்கிறது. பொய்ச் செய்திகளை பரப்பி வருகிறது. அதற்கு சில ஊடகங்களும் பலியாகியிருப்பது வருத்தம் தருகிறது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் பெரும் வெற்றியை ஈட்டிய நிலையில் நான்கு நாள் தாமதத்திற்குப் பின்னர் இன்று காலைதான் முதல்வரைத் தேர்வு செய்து முடித்துள்ளது அக்கட்சியின் மேலிடம். இதை வைத்து பாஜகவினர் சமூக வலைதளங்களில்  கிண்டலடித்து வந்தனர். மீம்ஸ்களும் பறந்து கொண்டிருந்தன. இதற்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா பதிலளித்திருந்தார்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:



கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைவது தொடர்பாக பாஜக போலிச் செய்தி பேக்டரி உற்பத்தி செய்யும் செய்திகளுக்கு சில மீடியா நண்பர்கள் பலியாகியிருப்பது வருத்தம் தருகிறது.  கர்நாடகத்தில் உள்ள சகோதர சகோதரிகளால் தாங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டதால் பாஜக விரக்தியில் இருப்பது புரிகிறது. ஆனால்  அவர்கள் 40% கமிஷன் அரசை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், கோவா மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களை தேர்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை எடுத்துக் கொண்டார். ஆனால் அதை இந்த பாஜக ஆதரவு ஊடகங்கள் கேள்வி கேட்டனவா.  அப்போது யாரும் இதுகுறித்து முனுமுனுக்கக் கூட இல்லை. ஆனால் அதே பிரிவினர் இப்போது மல்லிகார்ஜூன கார்கே நடத்தி வரும் பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகளை கேள்வி கேட்கின்றனர், விவாதிக்கின்றனர். 

சித்தராமையாவுக்கு "டிக்" அடித்த காங்... டி.கே.சிவக்குமார் துணை முதல்வர்.. 20ம் தேதி பதவியேற்பு

உண்மையான ஜனநாயக பாரம்பரியத்தைப் பின்பற்றும் கட்சி காங்கிரஸ். அதைத்தான் இப்போதும் நாங்கள் செய்து வருகிறோம்.  ஒவ்வொரு கன்னடரின் நலனையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் முதல்  5 முக்கிய வாக்குறுதிகள் குறித்து கர்நாடக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அடுத்த 48 அல்லது 72 மணி நேரத்தில் கர்நாடக அமைச்சரவை அறிவிக்கப்படும். பிராண்ட் கர்நாடகாவை நீங்கள் மீண்டும் கட்டி எழுப்புவோம். ஆறரை கோடி கன்னடர்களின் கனவை நனவாக்குவோம் என்று அவர் சுர்ஜிவாலா கூறியிருந்தார்.