காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்து நடந்தபோது.. என்ன சொன்னோம் தெரியுமா?.. ராகுல் காந்தி

Su.tha Arivalagan
Jun 05, 2023,12:38 PM IST
நியூயார்க்: காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்து  நடந்தபோது நாங்கள் பிரிட்டிஷ் அரசு மீது குற்றம் சாட்டவில்லை. மாறாக நாங்களே பொறுப்பேற்று ராஜினாமா செய்தார் ரயில்வே அமைச்சர் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நியூயார்க்கில் நடந்த இந்தியர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது ஒடிஷா ரயில் விபத்து குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.



ராகுல் காந்தி பேசுகையில்,  காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ஒரு ரயில் விபத்து நடந்தது. அப்போது நாங்கள், பிரிட்டிஷ் அரசுதான் இதற்குக் காரணம் என்று  கூறவில்லை. மாறாக அப்போதைய ரயில்வே அமைச்சர், இதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறி ராஜினமா  செய்தார்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது.. நாம் பல்வேறு காரணங்களைக் கூறுகிறோம்.. பொறுப்பை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறோம், ஏற்க மறுக்கிறோம். இதுதான் நமது பிரச்சினை என்றார் ராகுல் காந்தி.

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, ரயில்வே அமைச்சகம் கவச் திட்டத்தை செயல்படுத்ததாதே விபத்துக்குக் காரணம். ரயில்களில் விபத்து தடுப்பு கருவிகளை நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அமல்படுத்தினேன். அதை ரயில்வே தற்போது பயன்படுத்துவதில்லை. அதுவே விபத்துக்குக் காரணம் என்று அமைச்சர் அஸ்வனி முன்பாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும்  இந்த சமயத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று இந்தக் கோரிக்கைகளை பாஜகவும், மத்தியஅரசும் நிராகரித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.