என்னது எனக்கு கேன்சரா?..  பதறிப் போய் விளக்கம் கொடுத்த சிரஞ்சீவி!

Aadmika
Jun 05, 2023,01:27 PM IST
ஹைதராபாத் : தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாகவும் கடந்த சில நாட்களாக மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது. இது பற்றி நடிகர் சிரஞ்சீவி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவராகவும், அரசியலிலும் முக்கிய புள்ளியாக இருப்பவர் சிரஞ்சீவி. தனக்கு கேன்சர் பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெலுங்கில் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்துள்ளார் சிரஞ்சீவி. 



அதில், சமீபத்தில் புற்றுநோய் மைய திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட போது, புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பேசினேன். அப்போது எனக்கு பெருங்குடல் பரிசோதனை ஒன்று செய்யப்பட்ட��ாகவும் அதில் புற்றுநோய் பாதிப்பு இல்லாத பாலிப்கள் இருப்பது தெரிய வந்தாகவும் தெரிவித்தேன். இந்த பாலிப்கள் சிகிச்சைக்கு பிறகு சரி செய்யப்பட்டன. ஆனால் இதற்கு நான் சிகிச்சை எடுக்காமல் இருந்திருந்தால் அது புற்றுநோயாக மாறி இருக்கும் என டாக்டர்கள் தெரிவித்தனர் என பேசி இருந்தேன். 

இதை சில ஊடகவியலாளர்கள் தவறாக புரிந்து கொண்டு எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக்கு பிறகே நான் அதிலிருந்து மீண்டு வந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர். நான் பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல் அவர் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். 

இதனால் எனது உடல் நலம் குறித்து என்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் ஆகியோர் போன், மெசேஜ் அனுப்பிய வண்ணம் உள்ளனர். இது அவர்கள் அனைவருக்குமான விளக்கம். விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் முட்டாள் தனமாக எதையும் எழுதாதீர்கள் என்பதே ஊடகங்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள். அதனால் பலர் கவலையும், பயமும், பதற்றமும் அடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.