மீண்டும் வேலையை காட்டும் சீனா? புதிய வரைபடத்தால் கிளம்பிய பரபரப்பு

Aadmika
Aug 29, 2023,11:40 AM IST
டில்லி : அருணாச்சல பிரதேசத்தை சீன எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் மீண்டும் இரு நாடுகள் இடையேயான உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேச மாநிலத்தை தங்கள் நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சேர்த்து சீனா புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள அக்சய் சீன் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சீனா அந்த வரைபடத்தில் சேர்த்து வெளியிட்டுள்ளது. தைவான் மற்றும் பிரச்சனைக்குரிய தெற்கு சீன கடல் பகுதியையும் தங்கள் நாட்டு பகுதியாக சீனா சேர்த்துள்ளது.



சமீபத்தில் அருணாச்சலில் உள்ள 11 இந்திய பகுதிகளுக்கு சீனா புதிய பெயரை சூட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மீண்டும், அருணாச்சல பிரதேசத்தை தங்கள் நாட்டுடன் இணைத்து வரைபடம் வெளியிட்டுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு திபெத், அக்சய் சீன் ஆகியன 1962 ம் ஆண்டு போரின் போது சீனா கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது.

வியட்நாம்,  பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகளும் தென் சீன கடல் பகுதிகளை தங்களுக்கு உரியதாக சொல்லி வரும் நிலையில் சீன அதை தங்களுடைய ஆளுமைக்கு உட்பட்டதாக குறிப்பிட்டு வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இந்த வரைபடத்தை சீனாவின் புள்ளியியல் கணக்கெடுப்பு மற்றும் வரைபட தினத்தை முன்னிட்டு சீனாவின் இயற்கை வள அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன பிரதம் ஷின் ஜிங்பிங் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா கூறி இருந்தார். எல்லையில் அமைதியை பாதுகாக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.