ரொம்ப வெறியேத்துறாரே வெதர்மேன்.. டமால் டுமீல் மழை வரப் போகுதாம்.. இன்று முதல்!

Su.tha Arivalagan
Jul 09, 2023,10:05 AM IST
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று டமால் டுமீல் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் போட்டுள்ளார். 

தென் மேற்குப் பருவ மழை தொடங்கிய பின்னர் தமிழ்நாட்டில் கடும் வெயில் குறைந்தது. இடையில் அவ்வப்போது லேசான மழையும், சில நேரங்களில் நல்ல மழையும் பெய்து வந்தது. அதன் பின்னர் அதுவும் குறைந்தது. தென் மேற்குப் பருவ மழையும் கூட குறைந்து போனது.

சமீப நாட்களாக தென் மேற்குப் பருவ மழை மீண்டும் தீவிரமடைந்தது. கேரளாவில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பருவ மழை சூடு பிடித்தது. இந்த நிலையில் கேரளாவில் மழை சற்று குறைந்துள்ள நிலையில் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் ஏற்கனவே கூறியிருந்தார்.




நேற்று இரவு சென்னை புறநகர்ப் பகுதிகளில் லேசான மழை காணப்பட்டது. இன்று காலை முதல் வெயில் அடித்து வரும் நிலையில் டமால் டுமீல் மழை வரப் போவதாக வெதர்மேன் மீண்டும் கூறியுள்ளார். இதுதொடர்பாக  அவர் போட்டுள்ள டிவீட்டில், இன்று   கேடிசிசி பெல்ட்டில் (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு) டமால் டுமீல் மழை தொடங்கும். அடுத்த சில நாட்களுக்கு இந்த மழை ஒரே சீராக இருக்கும். பகலில் வெயில் அடிக்கும். மாலை,இரவு நேரங்களில் மழை பெய்யும்.

கேடிசிசி பெல்ட் தவிர ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கும் இந்த மழை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார் வெதர்மேன்.