ஃபேனை 24ல் திருப்பி வைங்கப்பா.. முடியலை.. செம வெயிலில் சுருண்ட சென்னை

Su.tha Arivalagan
Jun 02, 2023,03:35 PM IST
சென்னை: சென்னை நகரில் வெயில் இன்று மிகக் கடுமையாக இருந்தது. இன்று அதிக அளவிலான வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேனும் பதிவிட்டுள்ளார்.

அக்னி நட்சத்திரம் முடிவடைந்து விட்டது. அக்னிநட்சத்திர காலகட்டத்தில் பெரிய அளவில் வெயில் இல்லை. சில நாட்கள் கடுமையாக அடித்தது. பின்னர் இடை இடையே கோடை மழை வந்தது. இதனால் சமாளித்து விட்டோம். ஆனால் கத்திரி வெயில் முடிந்த பிறகு நேற்று கடுமையான வெயில் அடித்து வெளுத்தெடுத்து விட்டது.



தமிழ்நாட்டிலேயே அதிக அளவாக நேற்று மீனம்பாக்கத்தில் 106 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்தது. ஆனால் இன்று நுங்கம்பாக்கத்தில் அதே அளவிலான வெயில் பதிவானது. மீனம்பாக்கத்திலும் அதை விட அதிகமாகவே வெயில் அடித்தது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேனும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நுங்கம்பாக்கத்தில் 106 டிகிரி வெயில் நெருங்கி விட்டது. மீனம்பாக்கத்தில் நிச்சயம் அதை விட அதிகமாகவே பதிவாகும். நேற்று மீனம்பாக்கத்தில் தான் மாநிலத்திலேயே அதிக அளவிலான வெப்ப நிலை பதிவானது.  இன்று 107 டிகிரியைத் தாண்டுமா என்று பார்க்க வேண்டும்.  உண்மையான கத்திரி இப்போதுதான் வந்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கடும் வெயில் காத்திருக்கிறது என்று கூறியிருந்தார் வெதர்மேன்.

அதன் பின்னர் சென்னை மற்றும் புறநகர்களின் வெப்ப அளவையும் அவர் பதிவிட்டார். அதன்படி மாதவரத்தில்தான் அதிக அளவாக 108 டிகிரி வரை வெளுத்தது. பொத்தேரியில் 107 டிகிரி பதிவானது. மீனம்பாக்கத்தில் 106, நுங்கம்பாக்கத்தில் 106, தாம்பரத்திலும் அதே 106 டிகிரி வெயில் அடித்தது.

சென்னையில் இன்று வெயில் கடுமையாக இருந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். வீட்டிலும் இருக்க முடியவில்லை. வெளியிலும் வர முடியாத நிலை. ஏசி இருந்தோர் தப்பித்துக் கொண்டனர். மற்றவர்கள் பாடுதான் சிரமமாகி விட்டது.