வாங்க பேசலாம்... போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு

Aadmika
May 30, 2023,11:29 AM IST
சென்னை : போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் தமிழ்நாடு அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் காலவரையற்ற ஸ்டிரைக்கில் பஸ் ஊழியர்கள் இறங்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள் மற்றும் கன்டக்டர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நேற்று திடீரென அரசு பஸ் டிரைவர்கள், கன்டெக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திடீரென போக்குவரத்து பணிமனைக்கு பஸ்களை திருப்பி, மீண்டும் பஸ்களை இயக்க போவதில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென நிறுத்தப்பட்ட பஸ்களால் வாரத்தின் முதலான நேற்று வேலைக்கு சென்ற பொது மக்கள் வீடு திரும்ப முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகினர். இதை காரணமாக வைத்து ஷேர் ஆட்டோக்கள், தனியார் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிக்க துவங்கின. 

போக்குவரத்துக் கழக வேலைகளுக்கு தனியார் ஏஜென்சி மூலம் ஆள் எடுப்பதை எதிர்த்தே இந்த ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இந்த நிலையில் ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாளை இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் திமுகவின் தொமுச உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு பஸ் ஊழியர்கள் முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.