சென்னை மழை.. சீரமைப்புப் பணியில் முழுவீச்சில் மாநகராட்சி.. 1913க்கு போன் செய்யலாம்!

Su.tha Arivalagan
Jun 19, 2023,11:39 AM IST
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளப் பாதிப்புகளை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த திடீர் கன மழையால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளம் போலத் தேங்கியது. பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.



இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்திருந்ததால் பாதிப்பு பெரிதாவதற்குள் தேங்கிய நீர் அகற்றப்பட்டது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் உடனடியாக நிவாரணம் கிடைத்தது.

சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை. அதேசமயம், கத்திப்பாரா உள்ளிட்ட ஓரிரு இடங்களில் உள்ள சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியது. கத்திப்பாரா சுரங்கப் பாதை வெள்ளத்தில் ஒரு கார் சிக்கித் தவித்தது. பின்னர் அது பத்திரமாக மீட்கப்பட்டது.

இதற்கிடையே, சென்னை நகரில் மழை நீர் வெள்ளத்தை சரி செய்ய 2000 ஊழியர்களை சென்னை மெட்ரோ குடிநீர்வாரியம் களம் இறக்கியுள்ளது. 300 தூர்வாரும் இயந்திரங்கள், 57 கழிவு நீர் உறிஞ்சும் வாகனங்கள்  உள்ளிட்டவை 15 மண்டலங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்பு இல்லை

சென்னையில் தொடர் மழை பெய்த காரணத்தால் காலையில் லேசான போக்குவரத்து பாதிப்பு இருந்தது. தொடர்ந்து மழை பெய்ததாலும், பல சாலைகளில் மழை நீர் தேங்கிக் கிடந்ததாலும் வாகனப் போக்குவரத்து லேசான பாதிப்பை சந்தித்தது. இருப்பினும் பல பகுதிகளில் தற்போது மழை நின்றுள்ளதாலும், வெள்ள நீர் வடிந்து வருவதாலும் போக்குவரத்து சீரடைந்துள்ளது. இதனால் இயல்பான முறையில் போக்குவரத்து நடைபெறுகிறது.



சென்னை மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. மழை நின்றுள்ளதால் மக்களும் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

1913க்கு அழைக்கலாம்



இதற்கிடையே, சென்னை மாநகரில் வெள்ள பாதிப்பு ஏதேனும் இருந்தால் உடனடியாக 1913 என்ற உதவி எண்ணுக்கு அழைப்பு விடுக்கலாம் என்று சென்னை மாநகராட்சி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மழை நீர் தேங்கியிருந்தாலோ அல்லது மரம் கீழே விழுந்து கிடந்தாலோ மக்கள் இந்த எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.