"அந்த நிலாவைத்தான்"... 4313 கி.மீ. தூரத்தில் நெருங்கியது சந்திரயான் 3!

Aadmika
Aug 07, 2023,09:49 AM IST
பெங்களூரு : நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 3 நிலவிற்கு 4313 கி.மீ.,  தூரத்தில் உள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14 ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் நிலவுக்கு அனுப்பப்பட்டது. ஜூலை 15 ம் தேதியில் இருந்து ஜூலை 25 ம் தேதி வரை பூமியின் 5 நீள்வட்ட பாதைகளையும் சுற்றி வந்தது. ஆகஸ்ட் 1 ம் தேதி 1.2 லட்சம் கி.மீ., தூரத்திற்கும் அதிகமான தூரத்தில் சந்திரயான் 3 இருந்து வந்தது. ஆகஸ்ட் 01 ம் தேதி நிலவின் நீள்வட்ட பாதைக்குள் சந்தியான் 3 நுழைந்தது. இதையடுத்து சந்தியான் 3 ன் ஒவ்வொரு கட்ட நடவடிக்கைகளையும் இஸ்ரோ கண்காணித்து, தகவல் வெளியிட்டு வருகிறது. 



ஆகஸ்ட் 06 ம் தேதியான நேற்று, சந்திரனின் 3 வட்ட பாதைகளின் பயணத்தை சந்தியான் 3 நிறைவு செய்தது. சந்திரயான் 3 நிலவை நெருங்குவதற்கு முன் விக்ரம் மற்றும் பிரக்யான் விண்கலன்கள் சந்தியான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்து, நிலவின் வெளிப்புற செயல்பாடுகளை ஆய்வு செய்யும். சந்திரயான் 3 நிலவை நெருங்கும் தூரம் 18,074 கி.மீ.,லிருந்து 4313 கி.மீ., ஆக குறைந்துள்ளதாக இஸ்ரோ தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 09 ம் தேதி நிலவின் வெளிப்புற பாதையை சென்றடையும் என்றும், ஆகஸ்ட் 23 ம் தேதி மாலை 05.47 மணிக்கு நிலவில் சந்திரயான் 3 தரயிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தெற்கு பகுதியில் சந்திரயான் 3 தரையிறங்க உள்ளது.

இதற்கிடையே நிலவை நெருங்கி வரும் வீடியோ ஒன்றை சந்திரயான் 3 படம் பிடித்து அனுப்பியுள்ளது. அந்த வீடியோவைப் பார்க்கும்போதே பிரமிப்பாக உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் நிலவை நோக்கி நகர்வது போன்ற பிரமிப்பையும், சந்தோஷத்தையும் அது ஏற்படுத்துகிறது. இந்தியாவின் சாதனைகளின் உச்சமாக இந்த நிலவுப் பயணம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.