புது நாடாளுமன்றத் திறப்பையொட்டி.. ரூ.75 நாணயம்.. மத்திய அரசு திட்டம்!

Aadmika
May 26, 2023,12:46 PM IST
டில்லி : புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.75 நாணயத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நாணயத்தை மத்திய நிதியமைச்சகம் வெளியிட உள்ளது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய பார்லிமென்ட் கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு ரூ.75 நாணயத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது புதிய பார்லிமென்ட் கட்டிடத்திற்கு சின்னம் பொருத்தப்பட்டிருக்கும். வட்ட வடிவில் இருக்கும் இந்த நாணயங்கள் விரைவில் புழக்கத்திற்கு வரும். இதன் சுற்றளவு 44 மில்லி மீட்டர் ஆகும்.



இந்த புதிய நாணயத்தில் 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் காப்பர், 5 சதவீதம் நிக்கல், 5 சதவீதம் ஜிங்க் கலந்துள்ளது. 2023 என்ற வருடமும் சர்வதேச நியூமரிக்கல் எண்ணில் பார்லிமென்ட் கட்டிட படத்திற்கு முன் பொறிக்கப்பட்டிக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தான் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது புதிதாக ரூ.75 நாணயம் வெளியிடப்பட உள்ளதும் புதிய பிரச்சனையை கிளப்பி உள்ளது.  

புதிய பார்லிமென்ட் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் 25 க்கும் அதிகமான கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் உள்ள 18 கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத 7 கட்சிகளும் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளன. புதிய பார்லிமென்ட் கட்டிட திறப்பு விழா ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே புதிய பிரச்சனை ஒன்றை கிளப்பி உள்ளது.