அப்படியெல்லாம் விட்டுட்டுப் போய்ர முடியாது.. கிப்ட் வச்சுருக்கேன்.. தோனி செம இன்ஃபோ!

Su.tha Arivalagan
May 30, 2023,09:51 AM IST
அகமதாபாத்: ஐபிஎல்லுக்கு குட் பை சொல்ல இதுதான் சரியான நேரம். பொருத்தமாகவும் இருக்கும். ஆனால் உடனே முடிவெடுத்து விட முடியாது. சில மாதங்கள் பார்க்க வேண்டும்.. ரசிகர்களுக்கு கிப்ட் தரவும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக தொடர்ந்து கோலோச்சி வரும் தோனி இந்தியா முழுவதும் மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அன்பை வாரிக் குவித்து வைத்துள்ள வீரர் என்றால் அது தோனிதான்.



நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும், சிஎஸ்கே ரசிகர்கள்தான் மிகப் பெரியஅளவில் திரண்டு வந்திருந்தனர். அத்தனை பேரும் உச்சரித்த ஒரே வார்த்தை தோனி தோனி தோனி மட்டுமே. காரணம், இந்த சீசனுடன் ஐபிஎல்லை விட்டு தோனி ஓய்வு பெறப் போகிறார் என்று பரவிய தகவல்தான். அதுகுறித்து மறுப்பும் சொல்லாமல் ஆமாம் என்றும் சொல்லாமல் தோனி மெளனப் புன்னகை பூத்து வந்ததால் ரசிகர்கள் ரொம்பவும் வெறியாகி விட்டனர். என்னமோ நடக்கப் போகுதுடா என்ற பரபரப்பிலையே மைதானத்தை நிரப்பி வந்தனர்.

நேற்றும் கூட இறுதிப் போட்டி நடந்த அகமதாபாத் மைதானத்தை முழுக்க ஆக்கிரமித்து வைத்திருந்தவர்கள் சென்னை ரசிகர்கள்தான். தோனிக்காக கூடிய கூட்டம் இது. இந்த நிலையில் போட்டி முடிந்ததும் ரசிகர்களுக்கு சூப்பரான ஒரு செய்தியை வெளியிட்டார் தோனி. போட்டி முடிவில் தோனி பேசும்போது கூறியதாவது:

பதில் வேண்டுமா (ஓய்வு குறித்து).. சூழ்நிலைப்படி பார்த்தால் இதுதான் சிறந்த நேரமாக தோன்றும். ஆனால் இந்த முறை நான் போன இடங்களில் எல்லாம் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்பும், பாசமும் மிகப் பெரியது. தேங்க்யூ சோ மச் என்று ஈஸியாக கூறி விட்டு போய் விடலாம்.. ஆனால் அது கடினமானது.  எல்லாம் உடம்பு ஒத்துழைப்பதைப் பொறுத்து இருக்கிறது. 6-7 மாதங்கள் ஆகும் முடிவெடுக்க.. இது ரசிகர்களுக்கு எனது கிப்ட்டாகக் கூட இருக்கும்.  அவர்களது அன்பை நிராகரித்து விட்டுப் போவது மிகக் கடினம், ஈஸியானதல்ல. அந்த அன்பும், பாசமும் எனக்குத் தேவை.

எனக்கு கண்ணெல்லாம் குளமாயிப் போயிருக்கு. அமைதியாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் இதைக் கொண்டாட வேண்டும் என்பதை பின்னர் உணர்ந்தேன்.  நான் நானாக இருப்பதால்தான் இத்தனை அன்பை அவர்கள் என் மீது கொட்டுகிறார்கள். நான் அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பதை அவர்கள் அந்த அளவுக்கு நேசிக்கிறார்கள். அதை நான் மறுக்க விரும்பவில்லை. மீற விரும்பவில்லை.  சிம்பிளாக இருக்கவே முயற்சிக்கிறேன். காரணம் அது அவர்களுக்குப் பிடித்திருக்கிறது.

இது 5வது கோப்பை. ஆனால் ஒவ்வொரு கோப்பையும் விசேஷமானது.  ஐபிஎல்லின் விசேஷமே என்னவென்றால் ஒவ்வொரு போட்டிக்கும் நீங்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்பதுதான்  என்றார் தோனி.

அவர் சொல்வதைப் பார்த்தால் கண்டிப்பாக அடுத்த சீசனிலும் வந்து கலக்குவார் என்றே தெரிகிறது.. என்ன ரசிகர்களே ஹேப்பிதானே..!