பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை எப்படி இருக்கு?...லேட்டஸ்ட் ஹெல்த் அப்டேட்

Aadmika
Mar 25, 2023,04:30 PM IST
லண்டன் : பிரபல கர்நாடக இசைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தற்போது நலமுடன் உள்ளதாக அவரது குடும்பத்தின் சார்பில், அவரது ட்விட்டர் பக்கம் மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பத்மஸ்ரீ பட்டம் பெற பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் லண்டன் சென்றிருந்தார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் தங்கி இருந்த ஓட்டல் அறையில் மயங்கிய நிலையில் இருந்த பாம்பே ஜெயஸ்ரீ உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மிக முக்கியமான ஆபரேஷன் அவருக்கு நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இருப்பினும் பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அவரது குடும்பத்தார் சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாம்பே ஜெயஸ்ரீயின் ட்விட்டர் கணக்கில் இருந்து பதிவிடப்பட்ட ட்வீட்டில், பாம்பே ஜெயஸ்ரீக்கு லண்டனில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். உடல்நிலை தேறி வருகிறார். 

அவருக்கு இரண்டு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. இந்த சமயத்தில் உங்கள் அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் தர வேண்டும் என பாம்பே ஜெயஸ்ரீயின் குடும்பத்தார் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என அந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாம்பே ஜெயஸ்ரீ சுயநினைவிற்கு திரும்பியதும் அவர் சென்னை அழைத்து வரப்படுவார் என சொல்லப்படுகிறது. அவரது மூளைக்கு செல்லும் தமனிகளின் சுவர்கள் பலவீனமடைந்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது.