"தைரியமா இருங்க.. நாங்க இருக்கோம்".. அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த நிதீஷ் குமார்

Su.tha Arivalagan
May 21, 2023,12:46 PM IST
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார். 

டெல்லி அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையிலான மோதல் உலகம் அறிந்தது. டெல்லி மாநிலத்தைப் பொறுத்தவரை துணை நிலை ஆளுநருக்குத்தான் அதிக அதிகாரங்கள் உள்ளன. இதை எதிர்த்துத்தான் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக போராடி வருகிறார். தன்னால் ஒரு பியூனைக் கூட மாற்ற முடியவில்லை என்று அவர் முன்பு புலம்பியிருந்தார்.

இந்த நிலையில்  அரசு அதிகாரிகளை நியமிப்பது, இடமாற்றம் செய்வது, அவர்களை கையாளுவது ஆகியவை மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமையாகும். அதில் ஆளுநர் தலையிடக் கூடாது. அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து மத்திய அரசு அதிரடியாக ஒரு நடவடிக்கையில் இறங்கியது.

டெல்லி மாநில அரசு அதிகாரிகள் நியமனம், நீக்கம், இடமாற்றம் தொடர்பான முடிவுகளை எடுக்க ஒரு கமிட்டியை அறிவித்தது. அதில், முதல்வர், மத்திய அரசு சார்பில் 2 அதிகாரிகள் இடம் பெறுவார்கள். இவர்கள்தான் நீக்கம், நியமனம், இடமாற்றத்தை முடிவு செய்வார்கள். பெரும்பான்மை முடிவு அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும். இதில் குழப்பம் வந்தால் துணை நிலை ஆளுநர் இறுதி முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவசர சட்டத்தையும் பிரயோகித்தது மத்திய அரசு.



இந்த அவசர  சட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு விரோதமானது என்று அது வர்ணித்துள்ளது. இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக நிதீஷ் குமார் களம் இறங்கியுள்ளார். டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற நிதீஷ் குமார் கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார்.  அவருடன் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் உடன் இருந்தார்.

டெல்லி அரசின் போராட்டங்களில் தாங்கள் துணை நிற்பதாகவும், தங்களது ஆதரவு கெஜ்ரிவாலுக்கு உண்டு என்றும் அப்போது நிதீஷ்குமார் தெரிவித்தார். பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கெஜ்ரிவால் கூறுகையில், நிதீஷ் குமாருடன் நடந்த சந்திப்பு இதயப்பூர்வமாக இருந்தது. அவர் டெல்லி மக்களுடன் தான் துணை நிற்பதாக தெரிவித்தார். அனைத்து பாஜக அல்லாத  கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் ராஜ்யசபாவில் மத்திய அரசு டெல்லி தொடர்பாக  கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை  முறியடிக்க முடியும். அப்படி நடந்தால் அது 2024 லோக்சபா தேர்தலில்  பாஜகவுக்கு பலத்த அடியைக் கொடுக்க உதவும் என்றார் கெஜ்ரிவால்.

நிதீஷ்குமார் கூறுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்கள் அனைத்தையும் துணை நிலை ஆளுநரிடம் கொடுத்துள்ளது மத்தியஅரசு. எப்படி இதைச் செய்ய முடியும்.  இது அரசியல்சாசனத்திற்கு எதிரான செயலாகும். நாங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குத் துணையாக இருக்கிறோம்.  அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து இதில் போராடப் போகிறோம் என்றார் நிதீஷ் குமார்.