தமிழக பயணம் திடீர் ரத்து...ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த நிதிஷ்குமார்

Aadmika
Jun 20, 2023,12:43 PM IST
சென்னை : பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனது தமிழக பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். அவருக்கு பதிலாக பீர் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தான் தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தையும், முத்துவேலர் நூலகத்தையும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று (ஜூன் 20) திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பீகார் முதல்வரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் அரசு சார்பிலும் அழைத்திருந்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.



ஜூன் 23 ம் தேதி பாட்னாவில் பாஜக.,விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேச இருந்தது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதற்கு இந்த இருண்டு முதல்வர்களின் சந்திப்பு மிகப் பெரிய அடித்தளமாக அமையும் என கருதப்பட்டது. 

இந்நிலையில் நிதிஷ்குமார், திடீரென தனது தமிழக பயணத்தை ரத்து செய்துள்ளார். அவருக்கு பதில் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவே கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை காரணமாக நிதிஷ்குமார், தனது தமிழக பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் திடீரென தமிழக பயணத்தை ரத்து செய்தது ஸ்டாலினுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜூன் 23 ம் தேதி பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் அருவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாவாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.