பக்ரீத் 2023 : தியாகத்தை போற்றும் ஈகை திருநாள்

Aadmika
Jun 29, 2023,09:18 AM IST
சென்னை : இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பக்ரீத் பண்டிகை. ஈத் அல் அதா, ஈத் உல் அதா, ஈகை திருநாள், குர்பானி பெருநாள் என பல பெயர்களில் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

இறை தூதர் இப்ராஹீம், இறைவனிடம் பல காலமாக ஆண் குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தார். இறைவனின் கருணையால் இஸ்மாயீல் என்ற மகன் பிறந்தான். சில காலங்களில் அந்த மகனை இறைவனுக்கு பலியிட வேண்டும் என இறை உத்தரவு வந்தது. இறைவனின் உத்தரவை நிறைவேற்ற தனது மகனை பலி கொடுக்க தயாரானார் இப்ராஹீம். அந்த சமயம் மகனுக்கு பதில் பிராணி ஒன்றை பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டார். 



இறைவனின் உத்தரவை நிறைவேற்ற தனது மகனை பலியிட தயாராக இறை தூதர் இப்ராஹீமின் தியாகத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரெண்டாவது மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10 வது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் பிறை தெரிவது உலகின் பல பகுதிகளில் மாறுபடுவதால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் தேதியும் மாறுகிறது.

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையானது சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஜூன் 28 ம் தேதியும், இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளில் ஜூன் 29 ம் தேதியும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புக்களையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொள்வார்கள். பக்ரீத்தை முன்னிட்டு சிறப்பு தொழுகைகளும் நடத்தப்படுகின்றன.

இஸ்லாமிய கோட்பாடுகளின் படி, பக்ரீத் நாளில் கண்டிப்பாக குர்பானி அளிக்க வேண்டும். குர்பானியில் பலியிடப்படும் பிராணியின் மாமிசத்தை மூன்று பகுதிகளாக பங்கிட வேண்டும். இதில் ஒரு பகுதி குடும்பத்தினருக்கும், 2வது பகுதி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும், 3வது பகுதி ஏழைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.