பிரிக்ஸ் மாநாடு : இந்திய-சீன எல்லை பிரச்சனைக்கு முடிவு கிடைக்குமா?

Hamridha
Aug 22, 2023,12:35 PM IST
 ஜோகனஸ்பெர்க் : தென்னாப்பிரிக்காவில் இன்று பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா பிரதமர்கள் சந்தித்து பேச வாய்ப்புள்ளதால் இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் பிரிக்ஸ் மாநாடு இன்று (ஆகஸ்ட் 22) துவங்குகிறது. இதில் பிரேசில், சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 2019 ம் ஆண்டிற்கு பிறகு நடக்கும் முதல் பிரிக்ஸ் மாநாடு இதுவாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிக்ஸ் மாநாடு நடத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் உலக தலைவர்களின் சந்திப்பு என்பதால் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் சீன பிரதம் ஷின் ஜின்பிங்கும் கலந்து கொள்ள உள்ளார். இதனால் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா- சீனா பிரதமர்கள் சந்திப்பு ஏற்படலாம், அப்போது எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர்கள் சந்திப்பு இதுவரை முடிவாகவில்லை என தெரிகிறது.

பிரிக்ஸ் மாநாட்டிற்கு புறப்படுவதற்கு முன் காலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, உலக தலைவர்களை சந்தித்து, பயனுள்ள விஷயங்களை பகிர்வதற்கு இது நல்ல வாய்ப்பு. ஆக்கப்பூர்வ விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளதால், எல்லை பிரச்சனை குறித்து விவாதிக்கப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.