கர்நாடக சட்டசபைத் தேர்தல்... "இணை பொறுப்பாளர்".. அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு!
Feb 04, 2023,03:38 PM IST
புதுடில்லி : கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் 2023 ம் ஆண்டு மே மாதம் நிறைவடைய உள்ளது. இதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே மாதத்திற்கு முன் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தெடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரும் என்பதால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை துவக்கி வருகின்றன.
கர்நாடக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பதானை பாஜக தலைமை நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே கர்நாடகாவில் நடந்த பல சட்டசபை தேர்தல்களின் போது கட்சியின் பொறுப்பாளராக செயல்பட்டுள்ளார். இதனால் இந்த முறையும் அவரே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இணை பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.
2011 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை கரூர் மாவட்டத்தில் பணியாற்றி உள்ளார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூர், உடுப்பி போன்ற மாவட்டங்களில் எஸ்பி.,யாக பணியாற்றி உள்ளார். பெங்களூரு தெற்கு டிசிபி.,யாகவும் இருந்துள்ளார். 2019 ல் தனது போலீஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, அரசியலில் இணைந்தார். 2020 ல் பாஜக.,வில் இணைந்த இவருக்கு 2021 ஜூலை மாதத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
கர்நாடகா அரசியல் மற்றும் சட்ட விவகாரங்கள், மக்கள் குறித்து நன்றி தெரிந்தவர் என்ற வகையில் அண்ணாமலையை தேர்தல் இணை பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது. கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஹச்.ராஜா, அண்ணாமலைக்கு ட்விட்டர் மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.