ராகுலை தொடர்ந்து சோனியா காந்திக்கு பாஜக குறி?.. தேர்தல் கமிஷனிடம் புகார்

Aadmika
May 08, 2023,03:02 PM IST
பெங்களூரு : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கர்நாடக தேர்தல் கமிஷனிடம், பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சோனியா காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் மே 08 ம் தேதியான இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்று, பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். 



சமீபத்தில் பிரச்சாரத்தில் பேசிய சோனியா காந்தி, பாஜக மீதும் பிரதமர் மோடி மீது பகிரங்கமாக பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். இதைத் தொடர்ந்து நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி கர்நாடகாவை இந்தியாவில் இருந்தே பிரிக்க பார்க்கிறது. மதவாதம் போன்றவற்றை தூண்டிவிட்டு, கார்நாடகாவில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக தெரிவித்தார்.

மோடி பிரச்சாரத்தில் பேசிய அடுத்த நாளே, சோனியா காந்தி மீது கர்நாடக தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புக்களுக்கு ஆதரவாக சோனியா காந்தி பேசி வருவதாகவும், இந்த அமைப்புக்கள் மீண்டும் தலைதூக்கினால் அதற்கு காங்கிரசின் ராயல் ஃபேமலி தான் முன்எடுத்ததாக இருக்கும். இதை சீரியசாக எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சோனியா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது. 

ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கால் அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டதுடன், எட்டு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ராகுலை தொடர்ந்து சோனியா காந்திக்கு பாஜக குறிவைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. பாஜக - காங்கிரஸ் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளதால், கர்நாடகா தேர்தல் களம் கத்திரி வெயிலையும் மிஞ்சும் அளவிற்கு சூடு பிடித்துள்ளது.