ஈரோடு கிழக்கு.. முடிவு பாஜக கையிலா? அதிமுக கையிலா?...சிடி ரவிவின் மழுப்பல் பேச்சின் பின்னணி என்ன?

Aadmika
Feb 03, 2023,03:56 PM IST
சென்னை : இரு வேறு அணிகளாக செயல்பட்டு வரும் அதிமுக.,வின் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளை இணைக்க பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி ஆகியோர் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்.,ஐ தனித்தனியாக சென்ற சந்தித்தனர். பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறிய விஷயங்கள் பற்றியும், ஈரோடு இடைத்தேர்தல் பற்றியும் ஆலோசித்ததாக செய்தியாளர்களிடம் கூறினர்.



இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்., ஐ சந்தித்த பிறகு பாஜக அலுவலகம் வந்து செய்தியாளர்களை சந்தித்த சிடி ரவி பேசுகையில், "திமுக தமிழர்களுக்கு எதிரான கட்சி. அதை தீயசக்தி என்றே எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கூறி வந்தனர். மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். திமுக.,வை வீழ்த்த அதிமுக ஒன்றுபடுவது அவசியம்.

இடைத்தேர்தல் என்றாலே எப்படி நடக்கும் என அனைவருக்கும் தெரியும். திமுக தனது பண பலத்தை பயன்படுத்தி எப்படியாவது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற முயற்சி செய்யும். ஆனால் மக்கள் ஒன்றிணைந்து, திமுக.,வை படுதோல்வி அடைய செய்ய வேண்டும். திமுக.,வை வீழ்த்துவதற்காக ஒன்றுபட வேண்டும் என இபிஎஸ், ஓபிஎஸ் இருவரிடமும் கூறினோம்" என்றார்.

அதிமுக இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை ஓபிஎஸ், இபிஎஸ் ஏற்றார்களா என கேட்டதற்கு, அது பற்றி இப்போது சொல்ல முடியாது என பதிலளித்தார் சிடி ரவி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக.,வின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கும், வேட்புமனு தாக்கல் முடிய பிப்ரவரி 07 வரை அவகாசம் உள்ளது. அவகாசம் முடிவதற்கு முன் தெரிவிப்போம் என மழுப்பமாக பதிலளித்தார். 

அதிமுக இணைய வேண்டும் என்ற முடிவை பாஜக எடுப்பது போல், இடைத்தேர்தலில் பாஜக.,வின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி முடிவு செய்யும் அதிகாரம் அதிமுக வசம் உள்ளதாக அரசியல் வட்டார பேச்சுக்கள் தெரிவிக்கின்றன. ஒரே அணியாக இணைந்து ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என ஓபிஎஸ், இபிஎஸ் எடுக்க போகும் முடிவில் தான். அதிமுகவிற்கு ஆதரவா, ஒருவேளை அதிமுக இரு அணியாக போட்டியிட்டால் எந்த அணிக்கு ஆதரவு அளிப்பது என்பதை அறிவிக்க போகிறதா அல்லது பாஜக தனித்து போட்டியிட போகிறது என்பது தெரிய வரும்.

அதிமுக.,வின் நிலைப்பாட்டை பொறுத்தே பாஜக.,வின் முடிவு அமைய உள்ளதாக சொல்லப்படுகிறது. மற்றொரு புறம் பாஜக தலைமை, இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடம் சொல்ல சொல்லி அப்படி என்ன தகவல் சொல்லி அனுப்பி இருக்கும் என்ற சந்தேகமும் தமிழக அரசியல் வட்டாரத்தில் தீரவிமாக ஆராயப்பட்டு வருகிறது. திமுக.,வுக்கு எதிராக இவ்வளவு பேசிய சிடி ரவி, அதிமுக பற்றிய கேள்விக்கும், பாஜகவின் நிலை பற்றிய கேள்விக்கும் பதிலளிக்க மறுத்து, நழுவியது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.