2024 ம் ஆண்டு ஜனவரியில் அயோத்தி ராமர் கோவில் திறப்பு

Aadmika
May 25, 2023,11:01 AM IST
லக்னோ : அயோத்தி ராம் ஜென்மபூமியில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமர் கோவில் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ராமாயணத்தின் படி, ராமர் பிறந்த இடமான அயோத்தி ராம்ஜென்ம பூமியில் மிக பிரம்மாண்ட கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூமி பூஜை நடத்தப்பட்டது. இந்த பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, கோவில் கட்டுவதற்கான பணிகளை துவக்கி வைத்தார். ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.



ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்திர அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி வசூல் செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. உலகின் தலைசிறப்பு கட்டிட கலை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு இந்த கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 1800 கோடிக்கும் அதிகமான பொருட் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலின் பணிகள் தற்போது வேகப்படுத்தப்பட்டுள்ளன..

கோவில் பணிகளுடன் சேர்ந்து கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவை அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடத்தப்பட்டு வருகின்றன. மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பெரும் திரளாக பக்தர்கள் வந்து கலந்து க��ாள்ள வேண்டும் என யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை பார்வையிட்ட பிறகு பேசிய அவர், கோவில் விரிவாக்க பணிகளுக்கு இங்கு கடை வைத்திருப்பவர்கள் தங்களின் நிலங்களை தானே முன்வந்து கொடுத்து வருகின்றனர். அப்படி நிலம் அளித்தவர்களுக்கு மாற்று இடங்களில் கடைகள் அமைக்க ஏற்பாடு செய்து தரப்பட உள்ளது என்றார்.

2024 ம் ஆண்டு சங்கராந்தி அன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி இருந்தார். இதனால் ஜனவரி மூன்றாவது வாரத்தில் ராமர் கோவிலை திறக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 2024 ம் ஆண்டு மே மாதம் மோடி தலைமையிலான மத்திய அரசின் 10 ஆண்டு ஆட்சி காலம் நிறைவடைந்து, லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கு முன்பாக ராமர் கோவிலை திறக்க பாஜக திட்டமிட்டு தான் அயோத்தியில் அவசரமாக வேலைகள் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.