ஒவ்வொரு மாநிலத்தையும் சர்வாதிகாரம் ஆட்சி செய்யும்.. கெஜ்ரிவால் எச்சரிக்கை!

Su.tha Arivalagan
Jun 12, 2023,10:30 AM IST

டெல்லி: இன்று டெல்லியை சர்வாதிகாரம்தான் ஆட்சி செய்து வருகிறது. மக்கள் யாருக்கு  ஓட்டுப் போட்டும் பிரயோஜனம் இல்லை.. மத்திய அரசு சர்வாதிகார சட்டத்தைக் கொண்டு வந்து அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொள்ளும். நாளை ஒவ்வொரு மாநிலத்துக்கும் இது நேரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி அரசைக் கட்டுப்படுத்தும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் திரட்டி வருகிறார் கெஜ்ரிவால். ராஜ்யசபாவில் இந்த சட்டம் வாக்கெடுப்புக்கு வரும்போது அதை முறியடிக்க எதிர்க்கட்சிகளும் அணி திரண்டு வருகின்றன.



இந்த நிலையில் , டெல்லியைப் போலவே அனைத்து மாநிலங்களையும் மத்தியஅரசு கட்டுப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று  எச்சரித்துள்ளார் கெஜ்ரிவால். ராம்லீலா மைதானத்தில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு தெரிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

நிகழ்ச்சியில் கெஜ்ரிவால் பேசும்போது கூறியதாவது: டெல்லியில் சர்வாதிகாரம்தான் ஆட்சி செய்யும். துணை நிலை ஆளுநர்தான் உச்சகட்ட சக்தி படைத்தவராக திகழ்வார். மக்கள் யாரை வேண்டுமானாலும் வாக்களித்துத் தேர்வு செய்யலாம். ஆனால் மத்திய அரசுதான் டெல்லியை ஆட்சி செய்யும்.

நாடு முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். டெல்லி மக்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தர விரும்புகிறேன். நீங்கள் தனித்து விடப்படவில்லை. இந்தியாவின் 140 கோடி மக்களும் அவர்களுடன் இருக்கிறார்கள். கொடுங்கோல் சட்டத்திற்கு பலியான முதல் மாநிலம் டெல்லி. இனி இது ஒவ்வொரு மாநிலமா கொண்டு வரப்படும். ராஜஸ்தானுக்கும் வரும், பாஜக ஆளாத பிற மாநிலங்களுக்கும் வரும் என்றார் கெஜ்ரிவால்.

டெல்லி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. ஆட்சி கெஜ்ரிவால் கையில் இருந்தாலும் கூட நிர்வாகத்தில் அவரால் எதுவும் செய்ய முடியாத நிலையே நிலவி வந்தது. அதிகாரம், துணை நிலை ஆளுநரிடம் அனைத்து அதிகாரங்களும் குவிந்து கிடந்ததால். இந்த நிலையில்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம்தான் நிர்வாகத்தை கண்காணிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை குப்பைக்கு அனுப்பும் வகையில் மத்திய அரசு அவசரசட்டத்தைக் கொண்டு வந்து டெல்லி அரசை மீண்டும் முடக்கி விட்டது.

தற்போது அதிகாரிகள் தொடர்பான எந்த முடிவையும் கெஜ்ரிவால் எடுக்க முடியாது. மாறாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு அந்த கமிட்டிதான் எடுக்க முடியும். அந்தக் கமிட்டியில் மொத்தம் 3 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒருவர் கெஜ்ரிவால். மற்ற இருவரும் மத்திய அரசு அதிகாரிகள் என்பதால் எந்த முடிவையும் கெஜ்ரிவாலால் சுயாதீனமாக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.