கம்பம் ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன்.. தெருத் தெருவாக ஓட்டம்.. மக்கள் பீதி

Su.tha Arivalagan
May 27, 2023,12:49 PM IST
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் அரிக்கொம்பன் யானை புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். தெருத் தெருவாக ஓடிய அரிக்கொம்பனைப் பார்த்து மக்கள் அச்சமடைந்தனர்.

அரிக்கொம்பன் யானை ஊருக்குள் புகுந்திருப்பதால் மக்கள் யாரும் வீடுகளை விட்டுவெளியேற வேண்டாம் என்று  கம்பம் நகராட்சி மக்களை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அரிக்கொம்பன் எனப்படும் அரிசிக்கொம்பன் யானை தமிழ்நாடு - கேரளா எல்லையோரப் பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. சில முறை அதைப் பிடித்து பெரியார் வனப்பகுதியில் விட்டும் கூட அது மீண்டும் மீண்டும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. பல பகுதிகளில் விளைநிலங்களை அது பாழ்படுத்தியுள்ளது. பலர் அந்த யானையிடம் சிக்கி உயிரிழந்துள்ளனர்.



இந்த நிலையில் தற்போது கம்பம் நகருக்குள் அது புகுந்து விட்டது. யானை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் பீதியடைந்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைந்து யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். யானை ஊருக்குள் புகுந்திருப்பதால் மக்கள் வெளிய வர வேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துள்ளது.

லோயர் கேம்ப் பகுதி வழியாக அரிக்கொம்பன் கம்பம் நகருக்குள் புகுந்துள்ளான். பார்க்கவே ஆஜானுபாகுவாக காணப்படும் அரிக்கொம்பன் யானை கேரளாவிலிருந்துதான் தமிழ்நாட்டுக்குள் புகுந்தது. இரு மாநில வனத்துறையினரும் மாறி மாறி அதை காட்டுக்குள் அனுப்ப முயன்றும் கூட அவன் ஊர்களுக்குள் புகுந்து சேட்டை செய்து வருகிறான்.

இன்று கம்பம் நகருக்குள் யானை வந்தபோது பயத்தில் ஓடி கீழே விழுந்து 3 பேர் காயமடைந்தனர். சில வாகனங்களை அரிக்கொம்பன் தூக்கிப் போட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு எந்த விபரீதத்தையும் அரிக்கொம்பன் இதுவரை செய்யவில்லை. எங்கு போவது என்று தெரியாமல் அங்குமிங்குமாக அவன் சுற்றி வருகிறான்.

கம்பம் மெட்டு பகுதியை நோக்கி தற்போது அரிக்கொம்பன் போய்க் கொண்டிருக்கிறான். வழியில் பல தென்னந்தோப்புகள், வயல்கள் உள்ளன. அதன் வழியாக அரிக்கொம்பன் போய்க் கொண்டிருக்கிறான். அவனை மயக்க மருந்து செலுத்தி காட்டுக்குள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.