செந்தில் பாலாஜியை தூக்குங்க.. தமிழக முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

Aadmika
May 18, 2023,09:58 AM IST
சென்னை : தமிழக அமைச்சர் பதவியில் இருந்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்துக்கூறுகையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக முதல்வர் நீக்க வேண்டும். அப்போது தான் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கிய ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட வழக்கின் விசாரைண நேர்மையாக நடைபெறும். அவர் அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் மாநில போலீசார், விசாரணையை நேர்மையாக நடத்த முடியாது. 

முதலில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஊழல் வழக்கில் விசாரைண நேர்மையாக நடைபெறுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் அண்ணாமலை.



விசிக நிர்வாகியின் மிரட்டல்

இதே போல் சின்ன சேலம் தாசில்தார் இந்தியாவின் கை, கால்களை வெட்டுவதாக மீரட்டிய கள்ளக்குறிச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை கைது செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால், தாசில்தார் இந்திராவை மிரட்டிய வீடியோவையும் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாசுதேவனூர் பஸ் ஸ்டாப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கட்சி கொடி கம்பத்தை நட்டுள்ளனர். அந்த இடத்திற்கு வந்த தாசில்தார் இந்திரா, அதை அகற்றும் படி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் கூறி உள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். 

"கை கால்களை வெட்டுவேன்"

அங்கிருந்த தனபால், போலீசார் முன்னிலையிலேயே இந்திராவின் கை, கால்களை வெட்டுவதாக மிரட்டி உள்ளார். இதையடுத்து இந்திரா இது பற்றி போலீஸ் புகார் அளித்துள்ளார்.  இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், வாசுதேவனூருக்கு வந்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து சென்றுள்ளார்.

ஆனால் தாசில்தார் இந்திரா அளித்த புகாரின் பேரில் அந்த கொடி கம்பத்தை இரவோடு இரவாக போலீசார் அகற்றி உள்ளனர். தலைமறைவாக உள்ள தனபாலையும் போலீசார் தேடி வருகின்றனர். இது பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் கேட்டதற்கு, அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பற்றி தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.