மாஸ் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ஸ்வர்ணலதா.. மோசடி இன்ஸ்பெக்டரின் அதிரடி டான்ஸ்!

Su.tha Arivalagan
Jul 09, 2023,05:12 PM IST
விசாகப்பட்டனம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டனத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஸ்வர்ணலதா குறித்து அடுத்தடுத்து பல்வேறு தகவல்கள் வெளியாகி மக்களை கலகலப்பாக்கியுள்ளன.

வெள்ளிக்கிழமையன்று ஸ்வர்ணலதாவை போலீஸ் தனிப்படை ஒன்று கைது செய்தது. இரண்டு ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரிகளை மிரட்டி அவர்களிடமிருந்து ரூ. 12 லட்சம் பணத்தைப் பறித்தார் ஸ்வர்ணலதா என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஸ்வர்ணலதா தவிர கான்ஸ்டபிள் ஹேமசுந்தர், ஹோம் கார்டு ஸ்ரீனிவாச ராவ் என்கிற ஸ்ரீனு, புரோக்கர் சூரி பாபு (இவர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியைச் சேர்ந்தவர்) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.




கைது செய்யப்பட்ட ஸ்வர்ணலதா குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிப்படையில் இவர் தீவிர சினிமா ரசிகை ஆவார். ரசிகை என்றால் சாதாரண ரசிகை கிடையாது.. சினிமாவில் ஹீரோயின்கள் ஆடிப் பாடுவது போல பாடல்களுக்கு ஆடிப் பாடி வீடியோ எடுத்துக் கொண்டவர் என்று தெரிய வந்துள்ளது.

சினிமாவில் வரும் ஹீரோயின்களைப் போலவே கலக்கலான காஸ்ட்யூமில் அட்டகாசமாக ஆடிப் பாடி  நடித்துள்ளார் ஸ்வர்ணலதா. அது மட்டுமல்லாமல் ஏபி 31 என்ற படத்தையும் இவர் உருவாக்கி நடித்து வந்தார். இந்தப் படத்திற்காக நடன ஒத்திகை செய்த வீடியோவும் வெளியாகியுள்ளது. இதுதவிர இவர் ஆடிப் பாடிய இன்னொரு வீடியோவும் வெளியாகியுள்ளது. எஸ்.வி. கிரியேட்டிவ் என்ற யூடியூப் சானலில் அந்த வீடியோ காணப்படுகிறது.




ஸ்வர்ணலதா ஆந்திர மாநில போலீஸ் அதிகாரிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். இவர் மீது பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காக கிளம்பி வருகின்றன. அரசியல் ரீதியாக பல்வேறு தொடர்புகள் இவருக்கு இருந்ததாகவும்,அதை வைத்து  பலரையும் மிரட்டி காரியம் சாதித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தற்போது போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.