ஓபிசி, தலித், சிறுபான்மையினர் இணைந்தால்.. பாஜகவை வீழ்த்தலாம்.. அகிலேஷ் யாதவ்

Su.tha Arivalagan
Jun 17, 2023,03:55 PM IST
லக்னோ:  பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் இணைந்து கை கோர்த்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து பிரமாண்ட கூட்டணி அமைத்து போட்டியிட்டால் பாஜகவை உறுதியாக வீழ்த்த முடியும் என்று சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

2024 லோக்சபா  தேர்தலில் பாஜகவை எப்படி வீழ்த்துவது என்றுதான் நாட்டில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் பெருத்த யோசனையில் உள்ளன. ஆனால் பிரமாண்டக் கூட்டணி உருவாவது என்பது இதுவரை கானல் நீராகவே உள்ளது. அனைத்து முக்கிய கட்சிகளையும் ஓரணியில் இணைக்க பல்வேறு தரப்பிலும் தீவிர முயற்சிகள் நடந்து கொண்டேதான் உள்ளன. 



இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், என்டிடிவி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது பாஜகவை வீழ்த்த அவர் ஒரு பார்முலாவை பரிந்துரைத்தார். அவர் கூறுகையில், பாஜகவை வீழ்த்த பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஒன்றிணைய வேண்டும்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பாஜக வீழ்த்தவேண்டும். நாட்டை விட்டு அக்கட்சியை அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து தேசிய கட்சிகளும் எங்களுக்குத் துணை நின்றால் இது சாத்தியம். எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி வலுவானதோ அந்தக் கட்சிக்கு அதிக இடங்களைத் தர வேண்டும். அதுதான் வெற்றி தேடித் தர உதவும்.

நாங்கள் எப்போதுமே நியாயமான, நேர்மையான கூட்டணிப் பங்காளியாக இருந்திருக்கிறோம். பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம். காங்கிரஸுடன் இணைந்துள்ளோம். அப்போதெல்லாம் இடப் பங்கீடு  தொடர்பாக எங்களால் பிரச்சினை வந்ததில்லை என்பதை அனைவரும் அறிவர் என்றார் அகிலேஷ் யாதவ்.