100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்கிக் குவிக்க ஆகாசா ஏர் திட்டம்!

Su.tha Arivalagan
Jun 21, 2023,04:03 PM IST
டெல்லி: ஏர் இந்தியா பாணியில் அதிக அளவிலான விமானங்களை வாங்க தனியார் பயணிகள் விமான சேவை நிறுவனமான ஆகாசா ஏர் திட்டமிட்டுள்ளதாம். இந்த ஆண்டு கடைசியில் இந்த கொள்முதல் நடைபெறும் என்று தெரிகிறது.

3 இலக்க அளவில் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளதாம் ஆகாசா ஏர். அதாவது நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்களை அது வாங்கவுள்ளது. முதல் கட்டமாக நான்கு போயிங் 737 மேக்ஸ் விமானங்களை வாங்கவுள்ளதாம் ஆகாசா ஏர். ஏற்கனவே 72 போயிங் விமானங்களை வாங்க ஆகாசா ஏர் ஆர்டர் கொடுத்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்கள் பெருமளவில் விமானங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் மிகப் பெரிய அளவிலான விமான கொள்முதலை மேற்கொண்டு மொத்த தேசத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அதேபோல தொடர்ந்து ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருக்கும் இன்டிகோ நிறுவனமும்  500க்கும் மேற்பட்ட விமானங்களை ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்யவுள்ளது. 

இந்த வரிசையில் தற்போது ஆகாசா ஏர் நிறுவனமும் இணையவுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் ஆகாசா ஏர் நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. தற்போது அந்த நிறுவனத்திடம் 19 விமானங்கள் உள்ளன. 20வது விமானம் ஜூலை மாதம் இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வந்த வேகத்தில் இது நூற்றுக்கணக்கான விமானங்களை வாங்கப் போவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.