மீண்டும் பா.ரஞ்சித் டீமில் இணையும் ரித்விகா... பட டைட்டில் என்ன தெரியுமா?

Aadmika
Feb 08, 2023,12:01 PM IST
சென்னை : மீண்டும் இயக்குநர் பா. ரஞ்சித் டீமில் இணைந்துள்ளார் ரித்விகா.



டைரக்டர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் நடிகையானவர் ரித்விகா. அதற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்தாலும், சினிமாவில் பெரிய அளவில் தனக்கென அடையாளம் இல்லாமல் இருந்தார். பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் துணை நடிகையாக இவர் நடித்த ரோல், பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுத் தந்தது. இந்த படத்திற்கு பிறகு பலருக்கும் தெரிந்த நடிகையாகி விட்டார் ரித்விகா. 

கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்து இன்னும் பாப்புலர் ஆகி விட்டார். 2018 ல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, டைட்டிலை வென்றார். துணை நடிகையாக ஹேம்லியாக பல படங்களில் நடித்துள்ள ரித்விகா தற்போது எம்ஜிஆர், தீபாவளி போனஸ் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த சமயத்தில் மீண்டும் பா.ரஞ்சித் டீமில் இணைந்து பணியாற்ற ரித்விகாவிற்கு சான்ஸ் கிடைத்துள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக பல வெற்றிப் படங்கள் அவரது நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு, ரைட்டர், சேத்துமான், குதிரைவால், நட்சத்திரம் நகர்கிறது, பொம்மை நாயகி, ஜெ பேபி, இன்னும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன.

இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின்  இயக்குனர் அதியன் ஆதிரை தனது  இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். இதற்கு 'தண்டகாரண்யம்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.  இணை தயாரிப்பாக நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்சன்ஸ் பி.லிட். இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தில் தினேஷ், கலையரசன், ஷபீர் , பாலசரவணன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, அருள்தாஸ் , யுவன் மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன்,   உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். முதல்கட்டமாக ஓசூர் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.   இந்த படத்திற்கு 
ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார். 

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பா.ரஞ்சித் டீமில் ரித்விகா இணைந்துள்ளதால் இந்த படமும் பேசப்படும் படமாக மாறும் என்றும், நிச்சயம் விருது பெறும் என்றும் இப்போது கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபடுகிறது.