நீண்ட இடைவேளைக்கு பிறகு களமிறங்கும் ஏ.ஆர்.முருகதாஸ்...இந்த முறை ஹீரோ யாரு தெரியுமா?

Aadmika
Jan 22, 2023,09:50 AM IST

சென்னை : இந்திய சினிமாவின் மிக முக்கியமான டைரக்டர்களில் ஏ.ஆர்.முருகதாசும் ஒருவர். சோஷியல் மெசேஜ் உடனான கமர்ஷியல் படங்கள் எடுத்து, பல பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்தவர். தமிழ் மட்டுமல்ல இந்தியிலும் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. 


தமிழில் தீனா, கஜினி, ரமணா, துப்பாக்கி என டாப் ஹீரோக்களை மாஸ் ஹீரோக்களாக காட்டி, பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தை இயக்கினார். மும்பை போலீஸ் அதிகாரி ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம்.


இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதுடன், படுதோல்வியும் அடைந்தது. இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் பல பிரச்சனைகளை சந்தித்தார். இதன் காரணமாக தர்பார் படத்திற்கு பிறகு அவர் படங்கள் ஏதும் இயக்கவில்லை. இந்த தோல்வியில் இருந்து மீண்டு, மறுபடியும் ஒரு கம்பேக் கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது.


ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. விஜய்யுடனான படம் பல காரணங்களால் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு பல படங்களை இயக்கும் முயற்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் ஈடுபட்டதாகவும், அவை எதுவும் சரியாக வராததால் டைரக்டஷனுக்கு பிரேக் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


லேட்டஸ்ட் தகவலின் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்டஷனில் களமிறங்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தனது புதிய படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.