"ஈகை" மூலம் மீண்டும் அசத்த வரும்.. அஞ்சலி!

Su.tha Arivalagan
Jun 23, 2023,10:06 AM IST
சென்னை: திறமையான நடிகையாக அறியப்பட்ட அஞ்சலி மீண்டும் ஒரு அட்டகாசமான பாத்திரத்தில் கலக்க வருகிறார்.. ஈகை படத்தில்.

கற்றது தமிழ் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே அவர் பேசப்பட்டார். வெறும் அழகு மட்டும் என்னிடம் இல்லை.. சூப்பரான நடிப்புத் திறமையும் இருக்கிறது என்பதை அடுத்தடுத்து வந்த படங்களில் நிரூபித்தார்.



குறிப்பாக அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் அஞ்சலி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈகை என்ற படத்தில் அஞ்சலி முக்கியப் பாத்திரத்தில், நாயகியாக நடிக்கவுள்ளார். இது அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பாரதிராஜா, தெலுங்கு நடிகர் சுனில், இளவரசு உள்ளிட்ட பலரும் நடிக்கும் இப்படத்தில் கதை நாயகியாக நடிக்கவுள்ளார் அஞ்சலி.  கிரீன் அமூசிமெண்ட் மற்றும் D3 புரொடக்சன்ஸ்  தயாரிக்கும்
இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் நடைபெற்றது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகிறது. சென்னையில் தொடங்கி மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.



அசோக் வேலாயுதம் இப்படத்தை இயக்குகிறார். இவருக்கு இதுதான் முதல் படம். என்ன மாதிரியான கதை இது என்று அவரிடம் கேட்டபோது,  சஸ்பென்ஸ் நிறந்த சமூக கருத்துள்ள படமாக உருவாகிறது, ஈகைக்குணம் குறைந்த இன்றைய நாட்களில் சமூகத்தில் நிலவும் வன்முறைகளும், மனிதாபிமானமற்ற வாழ்வியலும் நிறைந்த மனிதர்களுக்கு மத்தியில் அறம் நிறைந்த ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு இந்த "ஈகை" என்று சொன்னார் அசோக் வேலாயுதம்.