ரசிகர்களின் அன்பு வெள்ளத்தில் நீந்தி வந்து.. மாணவர்களுடன் விஜய் சந்திப்பு!

Aadmika
Jun 17, 2023,11:31 AM IST

சென்னை :  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டு பொது தேர்வில் அதிக மார்க் வாங்கிய மாணவர்களுடனான நடிகர் விஜய்யின் சந்திப்பு இன்று கோலாகலமாக நடந்தது. ரசிகர்களின் அன்பு வெள்ளத்துக்கு மத்தியில் நீந்தியபடி வீட்டிலிருந்து விழா நடக்கும் இடத்திற்கு வந்தார் விஜய்.


பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று மார்க் எடுத்த மாணவர்களுக்கு விஜய் ஊக்கத்தொகை வழங்குகிறார். இதற்காக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இருந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ - மாணவிகள் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.




இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கிறார்கள். இதனால் 234 தொகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் சென்னை வந்துள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டில் இருந்து விழா நடக்கும் இடத்திற்கு ஏராளமான ரசிகர்கள் புடைசூழ பேரணியாக வந்தார் விஜய்.


விஜய்யின் காரைத் பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அணிவகுத்து வந்தனர். சாலையில் கார் போகிறதா அல்லது மிதக்கிறதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு ரசிகர்கள் வெள்ளத்தில் சிக்கி நீந்தியபடியே சென்றது கார். விஜய்யை சந்திக்க ஆர்வமுடன் வீட்டு வாசலிலேயே காத்திருந்த பல தீவிர ரசிகர்கள் அவரின் வீட்டு வாசலில் விழுந்து கும்பிட்ட வீடியோக்களும், போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகின்றன. 


அதேபோல விழா மண்டபத்திற்கு வந்து சேர்ந்த பிறகு உள்ளே போவதற்குள் விஜய் திக்குமுக்காடி விட்டார். அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் மிகப் பெரிதாக இருந்தது. கஷ்டப்பட்டுத்தான் உள்ளே வந்தார் விஜய். ஆனால் அந்த திணறல் உள்ளே வந்த பிறகு அவரது களைப்பு பறந்து போய் விட்டது.


மாவட்ட வாரியாக இல்லாமல், தொகுதி வாரியாக மாணவ - மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத்தொகை வழங்கப்படுவது, விஜய் பேரணியாக விழாவிற்கு செல்வது இவை எல்லாமே விஜய்யின் தீவிர அரசியலுக்கான என்ட்ரியாகவே பார்க்கப்படுகிறது.