டெல்லியில் 7 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி ரெடி!

Su.tha Arivalagan
Jun 29, 2023,10:41 AM IST
டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள  7 லோக்சபா தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

2024ம்  ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற பாஜக முனைப்புடன் உள்ளது. மற்ற கட்சிகள், பாஜகவை வீழ்த்தும் வழியைத் தேடிக் கொண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் அணி திரண்டு ஒற்றுமையுடன் பாஜகவுக்கு எதிராக களம் காண திட்டமிட்டுக் கொண்டுள்ளன.



இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தல் உத்திகளில் தீவிரமாகி வருகிறது. அக்கட்சிக்கு, காங்கிரஸ் கட்சிதான் முக்கிய எதிரியாக உள்ளது. காங்கிரஸைக் குறி வைத்தே ஆம் ஆத்மியின் செயல்பாடுகளும் உள்ளன. சமீபத்தில் பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதில் கூட அது காங்கிரஸுக்கு நிபந்தனை வைத்து விட்டே கலந்து கொண்டது. கூட்டத்திலும் கூட வாக்குவாதங்கள் ஏற்பட செய்தன.

காங்கிரஸ் தனது வழிக்கு வர வேண்டும் என்று ஆம் ஆத்மி எதிர்பார்க்கிறது. ஆனால் ஆம் ஆத்மி இழுக்கிற இழுப்புக்கெல்லாம் போக காங்கிரஸ் தயாராக இல்லை. இந்த நிலையில் டெல்லி லோக்சபா தேர்தலில் 7  தொகுதிகளிலும் தாங்கள் போட்டியிடத் தயார். கூட்டணி வலுவாக இருக்க வேண்டும் என்றால் அது காங்கிரஸின் செயல்பாடுகளைப் பொறுத்தது என்று அக்கட்சி கூறியுள்ளது.

பாஜகவின் டெல்லி அவசரச் சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாக, உறுதியாக எதிர்க்க வேண்டும். ஆனால் அவர்கள் அதில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த மறுக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணியாக அமைய வேண்டும். அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும். அது காங்கிரஸின் கையில்தான் உள்ளது என்று அக்கட்சி கூறியுள்ளது.