ஜெயலலிதா பிறந்தநாள்...அதிமுக தலைமையகத்தில் 75 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்

Aadmika
Feb 24, 2023,12:17 PM IST

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் 75 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


1948 ம் ஆண்டு பிப்ரவரி 24 ம் தேதி பிறந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்து பிறகு அரசியலுக்கு வந்து, மிகப் பெரிய ஆளுமையாக தன்னை நிலைநிறுத்தியவர். இவர் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.


இதற்கிடையில் அதிமுக.,வில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த வந்த, கட்சி யாருக்கு? இபிஎஸ் ஆ? ஓபிஎஸ் ஆ? என்ற குழப்பத்திற்கு சுப்ரீம் கோர்ட் நேற்று முற்றுப்புள்ளி வைத்தது. ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது. எடுப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக வந்த இந்த தீர்ப்பை நேற்று முதல் அதிமுக தொண்டர்கள் இனிப்புக்கள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.




இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளும் சேர்ந்து கொண்டதால் 75 கிலோவில், அம்மா 75 என எழுதப்பட்ட பச்சை, வெள்ளை நிற கேக் ஆர்டர் செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு, ஜெயலலிதாவின் பிறந்தநாள் என இரட்டிப்பு சந்தோஷத்தையும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் பெரிய அளவிலான கேக் வெட்டி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.


முன்னதாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட  அதிமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். 75 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அயன் லேடி என்ற வாசகம் பூக்களால் எழுதப்பட்டிருந்தது.