Vrooommm.. சென்னை மெரீனாவைக் கலக்கிய விமானப்படை விமான சாகச ஒத்திகை!

Su.tha Arivalagan
Oct 01, 2024,06:36 PM IST

சென்னை:   இந்திய விமானப்படைத் தினத்தையொட்டி அக்டோபர் 6ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் விமானப்படை சாகச கண்காட்சி நடைபெறவுள்ளது. இதுதொடர்பான ஒத்திகை இன்று தொடங்கியது.


இந்திய விமானப்படை தொடங்கி 92 வருடங்களைத் தொட்டுள்ளது. உலக அளவில் உள்ள தலை சிறந்த விமானப்படைகளில் இந்தியாவுக்கும் தனி இடம் உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழா நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது.




அதன் ஒரு பகுதியாக அக்டோபர் 6ம் தேதி சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை மெரீனா கடற்கரை வான்வெளிப் பகுதியில் விமானப்படை விமானங்கள் சாகசம் செய்து மக்களை மகிழ்விக்கவுள்ளன.


கிட்டத்தட்ட 72 வகையான விமானங்கள் இதில் பங்கேற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சூரிய கிரண் விமான சாகசம் உள்ளிட்ட பல்வேறு வகையான சாகச நிகழ்ச்சிகள் அன்றைய தினம் நடைபெறும். மேலும் சாரங் ஹெலிகாப்டர் டீமும் இதில் பங்கேற்கவுள்ளது. ரபேல், தேஜஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போர் விமானங்களையும் இந்த சாகச நிகழ்ச்சியின்போது மக்கள் கண்டு களிக்க முடியும். முற்றிலும் அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கான  ஒத்திகை தற்போது தொடங்கியுள்ளது. இன்று பிற்பகலில் மெரீனா கடற்கரைப் பகுதியில் நடந்த இந்த சாகச ஒத்திகையையும் மக்கள் பலர் கண்டு களித்தனர். வீரிட்ட சத்தத்துடன் விமானங்கள் ஒத்திகையைச் செய்து பார்த்தன. பலர் வீடுகளின் மொட்டை மாடிகளிலிருந்தும், அப்பகுதியில் உள்ள உயர்ந்த கட்டடங்களிலிருந்தும் இதைக் கண்டு மகிழ்ந்தனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்