அச்சச்சோ.. தொண்டையில் சிக்கிய நூடுல்ஸ்.. 8 வயது சிறுமி மரணம்.. பார்த்து சாப்பிடுங்க பிள்ளைகளே!

Meenakshi
Jul 03, 2024,03:31 PM IST

அடிமாலி (கேரளா):   நூடுல்ஸ் சாப்பிடும் போது தொண்டையில் சிக்கிக் கொண்டதால், மூச்சுத் திணறி, 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலியை சேர்ந்தவர் சோஜன். இவருக்கு மனைவி ஜினாவும், மகள் ஜோவானாவும் உள்ளனர். ஜோவானாவுக்கு வயது 8. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். ஜோவானா நேற்று முன் தினம் இரவு நூடுல்ஸ் உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது நூடுல்ஸ் அந்த குழந்தையின் தொண்டையில் சிக்கியது. இதனால் ஜோவானாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்துள்ளார்.




இதனை பார்த்த அவளது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து, உடனே குழந்தையை அடிமாலியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக இடுக்கி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகி்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலன் அளிக்காததினால் ஜேவானா பரிதாபமாக உயிர் இழந்தார்.


இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த அடிமாலி போலீசார், விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நூடுல்ஸ், சவர்மா போன்ற துரித உணவுகளால் பலர் பாதிக்கப்படுவதுடன் சிலரது உயிரும் பறிபோகும் நிலை தற்போது அதிகரித்து வருகிறது. இதில் இருந்து மக்கள் தங்கள் உயிரினை காத்துக்கொள்ள இத்தகைய உணவுகளை பாதுகாப்பான முறையில் உண்ண வேண்டும். சாப்பிடும்போது குறிப்பாக நூடுல்ஸ் போன்ற உணவு வகைகளை சாப்பிடும் போது கவனமாக சாப்பிட வேண்டியது அவசியமாகும்.