தெலுங்கானா சுரங்க விபத்தில்.. 2 இன்ஜினியர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

Meenakshi
Mar 01, 2025,01:35 PM IST

ஹைதராபாத்: தெலுங்கானாவில் பாசன வசதிற்காக சுரங்கம் அமைக்கும் போது, ஏற்பட்ட விபத்தில் சிக்கிய இரண்டு இன்ஜினியர் உட்பட 8 பேரும் உயிரிழந்தனர். இறந்த எட்டு பேரின் உடல்களையும் மீட்கும் பணியை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.


 

தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தில்  ஸ்ரீ சைலம் அணையில் இருந்து பாசன வசதிக்காக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கால்வாயில் 44 கி.மீ., நீளத்திற்கு சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கம் அமைக்கும் பணியின் போது, கடந்த பிப்., 22ல் திடீரென சுரங்க மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது . இந்த விபத்தின் போது 2 இன்ஜினியர்கள் உட்பட எட்டு பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.




அவர்களை மீட்கும் பணி கடந்த ஒரு வாரமாக இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம் மற்றும் அதி நவீன தொழில்நூட்பத்தின் உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. விபத்து ஏற்பட்ட பகுதியில் பாறைகள் அதிகளவில் இருப்பது, நீர்க்கசிவு, இடிபாடுகள், மண் சரிவு போன்ற காரணங்களால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.


கடும் முயற்ச்சிக்கு பின்னர் சுரங்கம் இடிந்து விழுந்த இடத்தை 20 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் அடைந்தனர். ஆனால், அந்த பகுதி முழுதும் சகதி இறுகி கிடந்ததினால், சிக்கயவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதன்பின்னர் மேப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சிக்கியவர்களை கண்டுபிடிக்கும் பணி தொடங்கியது.


கடந்த ஒரு வாரமாக மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிறிழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர். 5 பேரின் சடலங்கள் சேற்றில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடைந்த இயந்திரத்தின் அடியில் சிக்கி உயிரிழந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிநவீன சிறிய ரக டிரோன் மூலம் அவர்களின் இறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த 8 பேரின் உடல்களையும் மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.