ஆர்பிஐ அறிவிப்பு எதிரொலி.. ரூ. 2000 நோட்டுக்களை இறக்கி விட்ட சொமாட்டோ கஸ்டமர்கள்!

Su.tha Arivalagan
May 23, 2023,09:55 AM IST
மும்பை: ரூ. 2000 நோட்டுக்களை திரும்பப் பெறும் முடிவை ரிசரவ் வங்கி அறிவித்த பிறகு தங்களது வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் ரொக்கமாகவே கட்டணங்களை செலுத்துவதாக சொமாட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ அறிவிப்புக்குப் பிறகு தங்களது வாடிக்கையாளர்களில் 72 சதவீதம் பேர் ரூ. 2000 நோட்டுக்கள் மூலமாகவே கட்டணம் செலுத்தியதாகவும் சொமாட்டோ தெரிவித்துள்ளது.  

மே 23ம் தேதி முதல் ரூ. 2000 நோட்டுக்களைத் திரும்பப் பெறப் போவதாக ஆர்பிஐ கடந்த 19ம் தேதி அறிவித்தது. இன்று முதல் இப்பணிகள் தொடங்குகின்றன. ரூபாய் நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டாலும் கூடஇவை செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



இந்த நிலையில் சொமாட்டோ நிறுவனம் ஒரு சுவாரஸ்யமான தகவலைத் தெரிவித்துள்ளது.ஆர்பிஐ அறிவிப்புக்குப் பிறகு தங்களது வாடிக்கையாளர்களில் 72 சதவீதம் பேர் cash on delivery orders முறையை தேர்வு செய்ததாகவும், அதில் ரூ. 2000 நோட்டுக்கள் மூலம் கட்டணத்தை செலுத்தியதாகவும் சொமாட்டோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஒரு மீமையும் அது போட்டுள்ளது. இந்த டிவீட் தற்போது வைரலாகியுள்ளது.  இதைப் பார்த்து பலரும் ஜாலியாக கமெண்ட்டுகளைப் போட்டு வருகின்றனர். பேசாம நீங்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் டை அப் வச்சுக்கங்க. அவங்களுக்கு நீங்க லன்ச் கொடுங்க.. அவங்க உங்க ரூ. 2000 நோட்டுக்களை மாற்றிக் கொடுத்துருவாங்க என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

இந்த ரூ. 2000 நோட்டுக்கள் முற்றிலுமாக புழக்கத்திலிருந்து விடுபடும் வரை ஏகப்பட்ட கலாட்டாக்கள் அரங்கேறும் என்று தெரிகிறது.