நாட்றம்பள்ளி கோர விபத்து: 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி!
Sep 12, 2023,10:55 AM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த 48 பேர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோயில்களுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். 2 வாடகை வேன்களைப் பிடித்து அவர்கள் சென்றிருந்தனர். கோவில் பயணம் முடிந்து விட்டு அனைவரும் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி சண்டியூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 3 மணியளவில் வேன்கள் வந்து கொண்டிருந்தபோது, ஒரு வேனின் பின்பக்க டயர் திடீரென பஞ்சரானது.
இதையடுத்து அந்த வேனை டிரைவர் சாலையோரமாக நிறுத்தி அதை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். வேனில் இருந்த 15 பெண்கள் வேனை விட்டு இறங்கி, சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர்ப் பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்பொழுது, பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு மினி லாரி, பஞ்சராகி நின்றிருந்த வேனின் பின்பக்கம் மோதியது. அத்தோடு அருகில் அமர்ந்திருந்த பெண்கள் மீது மோதி நின்றது. இதில் லாரியின் அடியில் சிக்கி 7 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் அந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனால் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ யாரும் வர முடியவில்லை. அவர்களுக்குப் பின்னால் வந்த 2வது வேனில் இருந்தவர்கள்தான், முதலில் போன விபத்துக்குள்ளானதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கீழே இறங்கி ஓடிப் போய் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போ், ஆம்புலன்ஸ்கள் வந்தன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் ரஞ்சித் என்பவரின் மனைவி அவரது கண் முன்பாகவே லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.. இதைச் சொல்லி ரஞ்சித் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.
காயமடைந்தவர்களை அமைச்சர் எ.வ. வேலு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும் டாக்டர்களைக் கேட்டுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.