திருப்பதியில் சிறுத்தை தாக்கிய சிறுமியின் உடல் மீட்பு... அதிரடி முடிவெடுத்த தேவஸ்தானம்

Aadmika
Aug 14, 2023,10:27 AM IST
திருப்பதி : திருமலை திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தையால் தாக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான் விதித்துள்ளது.

திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் மலைப்பாதையில் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இதில் பலர் குடும்பத்துடன் வருவது வழக்கம். குழந்தைகள் பலரும் பாதயாத்திரை வருவது வழக்கம். அப்படி பெற்றோருடன் மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்த 6 வயது சிறுமி லக்ஷிதாவை சிறுத்தை ஒன்று தாக்கி உள்ளது. தொடர்ந்து அது சிறுமியை சிறுத்தை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்றுள்ளது.



இதனால் சிறுத்தையால் தாக்கப்பட்ட சிறுமியை மீட்பதற்காக வனப்பகுதியில் 12 க்கும் அதிகமான இடங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. இதில் மலைப்பாதையில் 5 இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் சிறுத்தையால் இழுத்துச் செல்லப்பட்ட 6 வயது சிறுமியின் சடலத்தை வனப்பகுதியினர் மீட்டுள்ளனர்.

சிறுமி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்திய திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் 2 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதன்படி, காலை 5 மணி முதல் பகல் 2 மணி வரை 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மலைப்பாதையில் பாதயாத்திரை வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 6 மணி முதல் காலை 6 மணி வரை மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன் ஜூன் மாதம் 3 வயது சிறுவனும் மலைப்பாதையில் சிறுத்தையால் தாக்கப்பட்டான். ஆனால் சரியான நேரத்தில் அந்த சிறுவன் மீட்கப்பட்டான். சிறுத்தை தாக்குதல்கள் அடிக்கடி நடப்பதால் பக்தர்கள் பாத யாத்திரையாக வரும் மலைப்பாதையில் ஏறக்குறைய 150 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு வனவிலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.