லிப்ட் அறுந்து விழுந்து.. 6 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே மரணம்!

Meenakshi
Sep 11, 2023,12:11 PM IST
மும்பை:  மும்பை அருகே அடுக்குமாடிக் கட்டடுமானத்தின்போது, 40வது தளத்திலிருந்து அறுந்து விழுந்த லிப்டில் இருந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பல்கும் பகுதியில் 40 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டப்பட்டு வருகிறது. இந்த அடுக்குமாடியின் 40வது தளத்தில் இறுதிப்பணிகள் நடந்து வருகின்றன. கட்டிட பணிகளுக்காக தற்காலிகமாக லிப்ட் ஒன்று அமைக்கப்பட்டிருந்து. 



இந்த லிப்டில் கட்டுமான பொருட்கள் ஏற்றுவதற்கு பயன்படுத்தி வந்த நிலையில், 
கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை எடுத்துக் கொண்டு 8 தொழிலாளர்கள் சென்றனர். இதில் கட்டிடடத்தின் 7-வது மாடி அருகே சென்ற போது லிஃப்ட் திடீரென பழுதடைந்து அப்படியே நின்றது. இதனால் பயந்த தொழிலாளர்கள் அங்கிருந்து சத்தம் எழுப்பினர். ஆனால் அவர்களின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. 

சில நொடிகளிலேயே லிஃப்ட் அங்கிருந்து வேகமாக கீழே விழுந்தது. இந்த விபத்தில் லிப்ட்டில் இருந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தானே அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு  குறித்த கேள்விகளையும் அது எழுப்பியுள்ளது. லிப்ட் அறுந்து விழுந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.