மயிலை மறக்க முடியமா? ஸ்ரீதேவியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று

Meenakshi
Feb 24, 2024,02:42 PM IST

சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி, கனவு கன்னியாக இந்திய சினிமாவில் வலம், சினிமா வரலாற்றிலேயே அழிக்க முடியாத அளவிற்கு தனக்கென தனி இடத்தை உருவாக்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்று. திரைத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தனது நடிப்பால் ரசிகர்களை கிறங்கடித்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. அவரது நினைவு நாளான இன்று அவர் குறித்து சில தகவல்கள் இதோ...




1963ம் ஆண்டு சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஐயப்பன்-ராஜேஸ்வரிக்கு மகளாக பிறந்தவர். ஸ்ரீ தேவியின் இயற்பெயர் ஸ்ரீ அம்மா. இவர் அமைதியான குணம் கொண்டவர்.பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டவர். 1969ம் ஆண்டு துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார். 1967ம் ஆண்டு கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.இவரது சிறந்த நடிப்பால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் தனது நடிப்பு திறமையால் பிரபலமானார். திருமாங்கல்யம் படத்தில் இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் இணைந்து நடித்தார். இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கத்தில்  மூன்று முடிச்சு படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் மயிலு கதாபாத்திரம், மக்கள் மனதில் இன்றளவும் இடம் பிடித்துள்ளது.


அன்றைய காலத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமலுடன் சேர்ந்து ஏராளமான படங்களில் நடித்தார்.தமிழில் மட்டுமல்லாது இந்தி திரையுலகிலும் உச்சத்தை தொட்டார். இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷி கபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகிய பெரும்  நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். பாலிவுட்டில் நீண்ட காலம் நடித்தவர்.




1996ம் ஆண்டு ஸ்ரீதேவி,  பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்தார். அவருக்கு ஜான்வி, குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி, தனது தாயார் மறைவிற்கு பின்னர் சிறிது காலம் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் நடிக்க வந்துவிட்டார். தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும் பெற்றவர். 4 முறை பிலிம்பேர் விருதினையும் வென்றவர். இவர் கடைசியாக நடித்த மாம் என்ற படம் இவரது 300வது படமாகும். கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ம் ஆண்டு பத்மஸ்ரீ  விருது வழங்கப்பட்டது.


இவர் 2018ம் ஆண்டு துபாயில் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது எதிர்பாராத விதமாக பிப்ரவரி 24ம் தேதி மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் மரணம் குறித்து பல்வேறு விதமாக காரணங்கள் கூறப்பட்டன. பின்னர் வெளியான பிரேத பரிசோதனையில், அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது இரத்தத்தில் மது கலந்திருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. திரைத்துறையில் இமயம் தொட்ட ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு ஸ்ரீதேவி-தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட் என்ற பெயரில் புத்தகமாக வரவிருக்கிறது.