சென்னை மெட்ரோவில் பயணிக்கும் அன்பர்களே.. உங்களுக்கு 2 அப்டேட்ஸ் வந்திருக்கு.. இதைப் படிங்க!

Su.tha Arivalagan
Jan 18, 2024,06:19 PM IST

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு 2 முக்கியமான அப்டேட்டுகளை சிஎம்ஆர்எல் நிறுவனம் வெளியிட்டுள்ளது


அதில் ஒன்று தற்காலிக அசவுகரியம் குறித்தது.. இன்னொன்று ஹேப்பி நியூஸ்.


முதல்ல அவுசகரியத்தைப் பார்ப்போம்..!




திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 50% வாகன நிறுத்தம் பகுதி தற்காலிகமாக மூடப்படுகிறது. ​பயணிகளின் வசதி மற்றும் சீரான வாகன நிறுத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டு, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில்தற்போதுள்ள வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் அமைக்கப்படவுள்ளது.


​இப்பணிகளை மேற்கொள்வதற்காக திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 50% வாகனநிறுத்தம் பகுதி 20.01.2024 முதல் இரண்டு மாதங்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகிறது.


​பயணிகள் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனபயன்பாட்டாளர்களுக்கு தற்காலிகமாக ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2வது அப்டேட் இது.. இது ஹேப்பி நியூஸ்!




அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல்  ஜெயந்த் டெக் பூங்கா வரை மெட்ரோ இணைப்பு வாகன சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைப்பு வாகன (Metro Connect) சேவைகள் சென்னை முழுவதும் உள்ள பல IT பூங்காக்களில் தொடங்கப்பட்டுள்ளன. நகரப் பயணிகளுக்கு அவர்களின் பணியிடத்திலிருந்து அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இணைப்பு வாகன சேவைகளை வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்துடன் இணைந்து மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜெயந்த் டெக் பூங்காவில் பணிபுரிவோரின் போக்குவரத்து நலன் கருதி அவர்களுக்கான மெட்ரோ இணைப்பு வாகன சேவையை தொடங்கியுள்ளது.


இந்த சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இன்று (18.01.2024) தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது, Fastrack Cabs நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.அம்பிகாபதி, ஜெயந்த் டெக் பார்க் நிறுவனத்தின் மேலாளர் வி.பாலகிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் பாஸ்ட் ட்ராக் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.


அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் ஜெயந்த் டெக் பார்க், மவுண்ட் பூந்தமல்லி நெடுஞ்சாலை நந்தம்பாக்கம் இடையே தோராயமாக 5 கி.மீ நீளத்திற்கு, சாலை போக்குவரத்து நெரிசலின்அடிப்படையில் 15 முதல் 20 நிமிடங்களில் இணைப்பு வாகன சேவை இயக்கப்படும்.


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணைப்பு வாகன சேவை குளிரூட்டப்பட்ட 18 இருக்கைகள் கொண்டது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் இயக்கப்படும். இந்த இணைப்பு வாகன சேவை இயக்கப்படும் நேரம் பயணிகளின் தேவைக்கேற்ப மாறுதலுக்கு உட்பட்டதாகும்.


Fastrack Cabs மொபைல் அப்ளிகேஷனில் மெட்ரோ கனெக்ட் சேவையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், பயணிகள் மெட்ரோ இணைப்பு வாகன சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு பயணத்திற்கு ஒரு நபருக்கான கட்டணம் ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு வாகன சேவை தினசரி பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.