சேலத்தில் நடந்த சோகம்: தனியார் பஸ் மோதி கர்ப்பிணி உட்பட 5 பேர் பலி... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Meenakshi
Jun 12, 2024,05:49 PM IST

சேலம்: சேலத்தில் நடந்த விபத்தில் கர்ப்பிணி மற்றும் 10 மாதம் குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர்.


சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள பூவனூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் தனது மனைவியுடன்  உறவினர் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சேலம் ஆரூர் நெடுஞ்சாலையில் லாரியின் பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் காத்திருந்தவர்கள் மீது தனியார் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கர்ப்பிணி, சிறுவன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த விபத்தில் லட்சுமணன் பலத்த காயங்களுடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 




இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் பலியானவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்தில் பயணம் செய்த 10த்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.


விபத்தில் படுகாயம் அடைந்த ஜெசிகா என்ற 10 மாத குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.மேலும் அதிக காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக சேலம்-அரூர் சாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.