கேரளாவுக்கு செல்வோர் கவனம்.. அடுத்த 5 நாட்களுக்கு பலத்த காற்றுடன்.. மிக கனமழைக்கு வாய்ப்பு!

Manjula Devi
Aug 19, 2024,06:20 PM IST

திருவனந்தபுரம்:   கேரளாவில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு செல்வோர் இதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது நல்லது.


கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்தது‌. இதில் பல்வேறு பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன. குறிப்பாக  தொடர் மழை காரணமாக வயநாடு பகுதியில் உள்ள முண்டக்கை, சூரல் மலை,மேப்பாபடி போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரின் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதனால் கேரளா நாட்டின் பாரம்பரிய நிகழ்வான ஓணம் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக அம்மாநிலம் அறிவித்திருந்தது.




இந்த நிலையில் கேரளாவில் மீண்டும்  மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்களுக்கு மழை குறித்த முன்னறிவிப்பை  இந்திய வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


கேரளாவில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத்த காற்றுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இடுக்கி, பத்தனம்திட்டா, மற்றும் கோழிக்கோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


திருச்சூர் மற்றும் பாலக்காடு தவிர, இதர மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் கடற்கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சிதலமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கனமழை பெய்யும் போது மக்கள் இரவு நேரங்களில் உயர் வரம்பு வழியாக பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்