Share Market.. ஹாங்காங்கை ஓரம்கட்டி உலக அரங்கில் 4வது இடத்தைப் பிடித்த.. இந்தியா.. செமல்ல!

Meenakshi
Jan 23, 2024,05:40 PM IST

மும்பை: இந்திய பங்குச்சந்தை உலக அரங்கில் 4 வது இடத்தை பிடித்துள்ளது. வரலாற்றில் முதன் முறையாக ஹாங்காங் பங்குச்சந்தையை இந்திய பங்குச்சந்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.


ஹாங்காங் பங்குச்சந்தையை இந்திய பங்குச்சந்தை பின்னுக்கு தள்ளியுள்ளது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது.  உலக அரங்கில் 4வது இடத்தையும் பிடித்துள்ளது இந்திய பங்குச்சந்தை முக்கியமானது இதன் காரணமாக இந்திய சந்தையில் அதிகப்படியாக முதலீடுகள் குவிந்து வருகிறது. இந்த தகவல் இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும்  இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. 


இந்திய பங்குச்சந்தையில், பங்குகளின் மொத்த மதிப்பு 4.33 டிரில்லியன் டாலராக  உள்ளது. அதுவே, ஹாங்காங் பங்குச்சந்தை பங்குகளின் மொத்த மதிப்பு 4.29 டிரில்லியன் டாலராகும். இதன் மூலம், ஹாங்காங் பங்குச்சந்தையின் மதிப்பை இந்திய பங்குச்சந்தை முந்தியுள்ளது. ப்ளும்பெர்க் தொகுத்த தரவுகளின் படி இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 




இந்த தர வரிசையில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பங்குச்சந்தை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. 4வது இடத்தில் இந்திய பங்குச்சந்தை உள்ளது தான். அதாவது "பங்குச்சந்தை வல்லரசு"களில் நான்காவது  நாடாக நமது நாடு உருவெடுத்துள்ளது. எப்படி சூப்பர் இல்ல!


செவ்வாய் கிழமை வர்த்தக துவக்கத்தில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 72,039.20 புள்ளிகளை அடைந்தது. இதன் மூலம், இந்திய பங்குச் சந்தையின் மொத்த சந்தை மதிப்பு 3,75,97, 315.42 கோடி ஆக உள்ளது. அதாவது 4.51 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்தியாவை உலக அளவில் நான்காவது பெரிய பங்குச்சந்தையாக மாற்றியுள்ளது. 


இந்திய பங்குச் சந்தையின் மூலதன மதிப்பு டிசம்பர் 5 அன்று முதன்முறையாக 4 ட்ரில்லியன் டாலரை தொட்டது. அடுத்து 45 நாட்களில் 4.5 ட்ரில்லியன் டாலரை தொட்டு உள்ளது. இன்று சென்செக்ஸ் குறியீட்டில் டாப் 30 நிறுவனங்களின் பட்டியலில் சன் பார்மா, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரேட் ஆகியவை உயர்வுடன், எஸ் பி ஐ,மாருதி சுசுகி, ஹிந்துஸ்தான் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி ஆகியவை சரிவிலும் இருந்தது.