"பராமரிப்பு பணி".. ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில்கள்.. திண்டாடித் தவித்துப் போன சென்னைவாசிகள்!

Su.tha Arivalagan
Feb 11, 2024,02:53 PM IST

சென்னை: பராமரிப்பு என்ற பெயரில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் ரயில்கள்  சமீப காலமாக அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன.  இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது.


சென்னை மக்களின் மிக முக்கியப் போக்குவரத்துகளில் ஒன்று புறநகர் ரயில்கள். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களில் இவை  இயக்கப்படுகின்றன. அதேபோல சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.




இதில் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான மார்க்கத்தில் அடிக்கடி பராமரிப்பு என்ற பெயரில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இது மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சென்னை நகருக்குள் எளிதாக சென்று வருவதற்கு மின்சார ரயில்கள்தான் சுலபமானவை, எளிமையானவை. குறிப்பாக ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கடற்கரைக்குச் செல்வோரும், தி நகர் போன்ற பகுதிகளுக்குச் செல்வோரும் புறநகர் ரயில்களைத்தான் அதிகம் நாடுவார்கள்.


இப்படிப்பட்ட நிலையில் விடுமுறைக்காலத்தில் இதுபோல பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் ரயில்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவது பயணிகளுக்கு பெரும் சிரமத்தைத் தருவதாக உள்ளது. குறிப்பாக இன்று மக்கள் மிகப் பெரும் அவஸ்தையைச் சந்தித்து விட்டனர்.


இன்று தை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் எங்கு பார்த்தாலும் கல்யாண வீடுகளுக்குச் செல்லும் கூட்டமாக இருந்தது. பஸ்களில் இடமில்லை. சாலைகளிலும் அதிக அளவிலான போக்குவரத்து.. இந்த நிலையில் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால் மக்கள் பட்ட அவதியைச் சொல்ல வார்த்தையில்லை. 


இன்று கடற்கரை - கோடம்பாக்கம் இடையே பராமரிப்பு பணி நடைபெற்றதால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3. 30 மணி வரை தாம்பரம் முதல் கடற்கரை வரை கிட்டத்தட்ட 44 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.  மேலும் பயணிகள் நலனுக்காக செங்கல்பட்டு - தாம்பரம் இடையே பல்வேறு சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்கள் ரத்து காரணமாக தாம்பரம் பஸ் நிலையத்தில் கூட்டம் அலை மோதியது. மாநகரப் போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை இயக்கியது. பலர் மெட்ரோ ரயில்களை நாடியதால் அங்கும் கூட்டம் அலை மோதியது.